இந்தியாவில் வாகன விற்பனை எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ள நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் உற்பத்தி அளவை குறைத்துவிட்டது மட்டுமல்லாமல் பல லட்ச ஊழியர்களைப் பணியிலிருந்தும் நீக்கியுள்ளது. இந்நிலையில் வாகன விற்பனையை உயர்த்த வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள முன்னணி இருசக்கர வாகன நிறுவனம் விநோதமான சேவையை அறிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி இருசக்கர வாகன விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோ காரப் வாகன விற்பனை எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள நிலையில், புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், வாடிக்கையாளர் புக்கிங் செய்த வண்டியை தங்களது வீட்டிற்கே கொண்டு போய் நேரடியாக டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.
இது நாள் வரையில் இந்தியாவில் புதிதாக வர்த்தகம் துவங்கும் நிறுவனங்கள் தான் மக்களைக் கவர வேண்டும் என வாகனத்தை வீட்டிற்கே கொண்டுபோய் டெலிவரி செய்யும். தற்போது வளர்ந்து சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஹீரோ மோட்டோ கார்ப் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சேவையை ஏற்கனவே மும்பை, பெங்களுரூ, நொய்டா ஆகிய நகரங்களில் சோதனை திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இது வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பதை உணர்ந்துள்ளது ஹீரோ மோட்டோ கார்ப்.
இதனால் இத்திட்டத்தை நாடு முழுவதிலும் சுமார் 25 நகரங்களில் படி படியாக விரிவாக்கம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது ஹீரோ மோட்டோ கார்ப்.
இதுகுறித்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி பேசுகையில், நாங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைச் செய்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தற்போது தலையாயக் கடமையாக எடுத்துள்ளோம். எங்களது முயற்சியின் மூலம் இனிவரும் மாதங்களில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் இந்தச் சேவையையும் ஹீரோ மோட்டோ கார்ப் இலவசமாகச் செய்யப்போவது இல்லை. இந்தச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் 349 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்யக் களம் கண்டது. இதுவும் ஒரு புதிய முயற்சியாக இருந்தாலும் பெரிய அளவிலான வெற்றி கிடைக்காத காரணத்தினால் இதைக் கைவிட்டது.
ஆயிரம் இருந்தாலும் விற்பனை எண்ணிக்கை படுமோசமாக இருக்கும் காலத்தில் கூட ஹோம் டெலிவரிக்குக் கட்டணத்தை வசூலிப்பதை என்னவென்று சொல்வது.