மும்பை : சர்வதேச பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக,இந்திய பங்கு சந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டன. இதையடுத்து அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1.26 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 70.46 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தை முடிவில் 69.60 ரூபாயாக முடிவடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 70.60 ரூபாய் வரை சென்று, தற்போது 70.46 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த டிசம்பர் 2018க்கு பிறகு இப்படியொரு மிகப்பெரிய வீழ்ச்சியை இந்திய ரூபாய் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா சீனாவின் வர்த்தக பிரச்சனைகள், அன்னிய முதலீட்டாளர்களிடையே ஒரு அழுத்தத்தை கொடுத்து வரும் நிலையில், அதன் எதிரொலி இந்திய ரூபாயிலும் காணப்படுகிறது. ஏனெனில் இந்த இரு நாடுகளிடையே நிலவும் பிரச்சனையால் உலக அளவிலான பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில் இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்பட்டது. ஆமாங்க.. அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்தால் இந்திய பங்கு சந்தையும் வீழ்ச்சியையே கண்டது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் 1.26 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.
இந்திய சந்தையிலிருந்து வெளியேறும் அதிகப்படியான அன்னிய முதலீடால், இந்திய பங்கு சந்தை வீழ்ச்சி காணலாம் என்ற உள்நாட்டு முதலீட்டாளர்களின் சென்ட்டிமென்ட்டும், இந்தியா ரூபாயின் வீழ்ச்சிக்கு மேலும் காரணமாக அமைந்தது.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய அரசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வரிக்கவலைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக கூறியதால் ஏற்றம் கண்ட நிலையில், அமெரிக்கா சீனா இடையே அதிகரித்து வரும் வர்த்தக பிரச்சனையால் இன்று மீண்டும் இந்திய பங்கு சந்தை கரடு முரடான நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் சென்செக்ஸ் இன்று 600 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. அதிலும் நடப்பு மாதத்தில் இரண்டு டிரேடிங் செசன்களிலேயே, அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஈக்குவிட்டி சந்தையிலிருந்து 2,632.58 கோடி ரூபாய் மதிப்பிலான FPIs பங்குகள் வெளியேறியுள்ளது. இதுவே கடன் பிரிவில் இருந்து 248.52 கோடி ரூபாயும் வெளியேறியுள்ளது.
மேலும் சீனாவின் கரன்சி மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது இதற்கு இரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆமாங்க.. அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு மீண்டும் வரியை அதிகரிப்பதாக கூறியுள்ள நிலையில், சீனாவின் மத்திய வங்கி நாணய மதிப்பு குறைப்பை அனுமதித்துள்ளது.