இந்திய டெலிகாம் சந்தையில் நிலையான வர்த்தகத்தையும், குறிப்பிடத்தக்க வர்த்தகப் பங்கீட்டையும் வைத்திருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஜியோ என்னும் சூறாவளியில் காணாமல் போனது. இதனால் வர்த்தகத்தை முழுமையாக இழந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் தனது சேவையை ரத்துச் செய்தாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதன் பின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வாங்கியிருந்த கடனை திரும்பச் செலுத்த முடியாத காரணத்தால் இந்நிறுவனம் திவாலாகி நிற்கிறது.
சொத்துக்கள்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அதன் துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம். ரிலையன்ஸ் இன்பராடெல் முடங்கிய நிலையில் இந்நிறுவன சொத்துகளைக் கைப்பற்ற முகேஷ் அம்பானியின் ஜியோ உட்பட நாட்டின் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் போட்டிப் போட்டு வருகிறது.
போட்டி
இந்நிறுவன சொத்துக்களை வாங்க சுமார் 10 - 12 நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் போட்டி என்னவோ ஏர்டெல்-க்கும் ஜியோவுக்கும் தான் என்கிறது டெலிகாம் வட்டாரங்கள்.
ஆர்காம் நிறுவனத்திடம் இருக்கும் சொத்துக்கள் ஒரு டெலிகாம் நிறுவனத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்பதால் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது.
சொத்துகள்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திடம் 22 டெலிகாம் வட்டங்களில் 14 வட்டங்களில் ஸ்பெக்ட்ரம் வைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தின் கீழ் சுமார் 43000 டெலிகாம் டவர்கள் உள்ளது.
இதோடு ஆர்காம் நிறுவனத்திடம் 2021ஆம் ஆண்டு வரையில் பயன்படுத்தக்கூடிய 800MHz 4ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளது. இந்நிலையில் இந்தச் சொத்துகளை விற்பனை செய்தால் ஆர்காம் நிறுவனத்தின் கடன் அளவை குறைக்க முடியும்.
கடன் அளவு
அனில் அம்பானி தலைமை வகிக்கும் ஆர்காம் நிறுவனம் சுமார் 46000 கோடி கடனில் தவிக்கிறது. இந்நிறுவனத்திற்குச் சுமார் 39 நிதி நிறுவனங்கள் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தம்பியை கடனில் இருந்து காப்பாற்ற முகேஷ் அம்பானி ஆர்காம் நிறுவனத்தை வாங்க முடிவு செய்து இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது டெலிகாம் துறை இந்த ஒப்பந்தத்திற்குத் தடை விதித்தது.