இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் வரையில் உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து அதன் வழியில் செல்ல திட்டமிட்டு இருப்பதாகப் பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்தார். இதை எப்படி அடையப்போகிறோம் என்பது ஒருபக்கம் இருக்க..
நாணய கொள்கை கூட்டம்
ரிசர்வ் வங்கியின் 3வது இருமாத நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி துவங்கியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நடக்கும் முதல் நாணய கொள்கை கூட்டம் என்பதால் பொருளாதார வல்லுனர்கள் மட்டும் அல்லாமல் சாமானிய மக்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.
மோசமான நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கனவே 3 முறை வட்டி விகிதத்தைக் குறைந்த ரிசர்வ் வங்கி இந்த முறையும் அடிப்படை வட்டி விகிதத்தைக் குறைக்கும் என அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
சக்தி காந்த தாஸ்
ஆகஸ்ட் 7ஆம் தேதி அதாவது இன்று முடியும் நாணய கொள்கை கூட்டத்தில் குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைக்கப்படலாம் எனக் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
6 பேர் கொண்ட நாணய கொள்கை கூட்டத்திற்கு சக்தி காந்த தாஸ் தலைமை வகிக்கும் நிலையில், நாட்டின் பணப் புழக்கத்தை அதிகரித்து நாட்டின் வர்த்தக நிலையை மேம்படுத்திப் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் ரெப்போ விகிதம் குறைக்க முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம்
ஏற்கனவே ஆட்டோமொபைல் துறை அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை சந்தித்து இருக்கும் இந்த வேளையில் வட்டி குறைப்பதன் மூலம் மக்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் பட்சத்தில் நாட்டின் வர்த்தகம் மேம்படும்.
ஆனால் ரிசர்வ் வங்கி அறிவிக்கப்படும் வட்டி விகிதத்தை வணிக வங்கிகள் நடைமுறைப்படுத்துவது இல்லை. லாப நோக்கத்திற்காக ரிசர்வ் வங்கி அளிக்கும் பலனை வணிக வங்கிகள் முழுமையாக மக்களுக்குக் கொடுப்பது இல்லை.
இதனால் ரிசர்வ் வங்கி கணக்கிட்ட பொருளாதார வளர்ச்சி அடைய முடிவது இல்லை.
சிஆர்ஆர் விகிதம்
இந்த முறை ரிசர்வ் வங்கிக்கு பல்வேறு வர்த்தக அமைப்புகளிடம் இருந்து வங்கிகளுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் cash reserve ratio-வை (CRR) 50 புள்ளிகள் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
CRR விகிதத்தில் 50 புள்ளிகளைக் கொடுத்தால் பணப்புழக்க சந்தையில் சுமார் 60000 கோடி ரூபாய் வரும் இது வர்த்தகச் சந்தைக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக விளங்கும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.