டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இந்த நிலையில் 5.75 சதவிகிதமாக இருந்த விகிதம், இனி 5.4 சதவிகிதமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க இது பெரிதும் உதவும் என்றும், இதனால் வட்டி விகிதம் கட்டாயம் 0.25 - 0.5 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வட்டி விகித குறைப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே மூன்றும் முறை வட்டியை குறைந்துள்ள ரிசர்வ் வங்கி இந்த முறையும், இதை செயல்படுத்துமா? வட்டி குறைப்பு இருக்குமா என்ற சந்தேகமும் நிலவி வந்த நிலையில், தற்போது வட்டி குறைப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில் மக்கள் தாங்கள் பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும், இ.எம்.ஐ குறையும் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.
அதிலும் நடப்பு ஆண்டில், கடந்த பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இந்த வரி விகிதம் குறைப்பு நடந்த நிலையில், இந்த முறை வட்டி குறைப்பு இருக்குமா? என்று பலரின் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது என்றே கூறலாம். அதிலும் கடந்த 6 மாதங்களில் மட்டும் இது 4-வது முறையாக குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து, பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளுக்கு வட்டி விகிதம் குறையும், இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் மீதான கடன் மீதான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் மக்களை அதிகளவில் இம்சை செய்து வரும் மாதத் தவணைகளும் சற்றே குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் விரைவில் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் போது, வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை குறையலாம் என்றும், மறுபுறம் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.