இந்தியாவின் முன்னணி தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய கூட்டணி அமைத்துள்ளது.
இப்புதிய கூட்டணியின் மூலம் இந்தியாவில் புதிதாக 5500 பெட்ரோல் பங்குகளைத் திறந்து மக்களுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
கூட்டணி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ரீடைல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை அதிகரிக்கப் பிரிட்டன் BP நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
இக்கூட்டணி புதிய நிறுவனத்தைத் துவங்கி அதன் கீழ் இந்தியா முழுவதும் பெட்ரோல் பங்குகளைத் திறக்கவும், இந்தியாவில் இருக்கும் விமான நிறுவனங்களுக்குச் சில்லறை விற்பனை முறையில் விமான எரிபொருளை விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
இணைப்பு
ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் 1400 பெட்ரோல் பங்குகளும், 31 விமான எரிபொருள் நிலையங்கள் இருக்கும் நிலையில், இவை அனைத்து புதிய கூட்டணி நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இப்புதிய வர்த்தக விரிவாக்கத்தின் மூலம் இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை எரிபொருள் வியாபாரம் சூடுப்பிடிக்க உள்ளது.
பங்கீடு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் BP கூட்டணியில் உருவாகும் புதிய நிறுவனத்தில் 49 சதவீத பங்குகள் BP கட்டுப்பாட்டிலும், 51 சதவீத பங்குகள் ரிலையன்ஸ் நிறுவன கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
மேலும் இக்கூட்டணி நிறுவனம் அடுத்த 5 வருடத்தில் நாட்டின் முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் சுமார் 5500 பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட உள்ளது.
ஆரம்கோ
குஜராத் ஜாம்நகர் பகுதியில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்புத் தளத்தில் சவுதி ஆரம்கோ முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்குத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு பிரிட்டன் BP நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
முதலீடு
ஆரம்கோ ரிலையன்ஸ் நிறுவன சுத்திகரிப்பு தொழிற்சாலையின் 25 சதவீத பங்குகளைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் ஆரம்கோ நிறுவனமே இந்தியாவில் நேரடியாகப் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் வகையில் சில்லறை சந்தையில் இறங்கவும் முடிவு செய்துள்ளது.
இதற்காகவும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உடன் ஆராம்கோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பெட்ரோல் பங்க்
இந்தியாவில் சுமார் 65000 பெட்ரோல் பங்க்-கள் உள்ளது, அதில் 58,174 பங்குகளைப் பொதுத்துறை நிறுவனங்கள் வைத்துள்ளது. மீதமுள்ளவை தான் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானது.
இதில் ரஷ்ய நிறுவனமான Nayara Energy-யின் எஸ்ஸார் பெட்ரோல் பங்குகள் எண்ணிக்கை 5244, இதை அடுத்த 3 வருடத்தில் 7000ஆக உயர்த்த திட்டமிட்டு வருகிறது. ஷெல் நிறுவனம் இந்தியாவில் 151 கிளைகளை வைத்து வர்த்தகம் செய்து வருகிறது.