இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான CIME அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 40 லட்சம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் மட்டும் சுமார் 40.5 கோடி பேர் வேலைவாய்ப்பில் உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால் ஓரே துறையில் கடந்த 4 மாதத்தில் கிட்டத்தட்ட 3,50,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதை CIME அமைப்பு கவனிக்க மறந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆட்டோமொபைல் துறை
கடந்த ஒரு மாத காலமாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்துள்ளது. எங்குத் திரும்பினாலும் வேலைவாய்ப்பு இழப்பு, உற்பத்தி குறைப்பு, விற்பனையில் சரிவு.
இவை அனைத்தையும் தாண்டி ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் அதிகளவிலான சரிவைச் சந்தித்துப் பல முதலீட்டாளர்கள் இத்துறை பங்குகளில் செய்திருந்த முதலீடுகளைத் திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் ஆட்டோமொபைல் பங்குகளின் விலை அதிகளவிலான சரிவைச் சந்தித்துள்ளது.
வாகனங்கள் தேக்கம்
ஜூன் மாத துவக்கத்தில் வெளியான தகவல்களின் படி சுமார் 5 பில்லியன் டாலர் அதாவது 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
இதேபோல் 30 லட்ச இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதன் மதிப்பு 17,000 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி சரிவு
கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்களைத் தேக்கம் அடைந்துள்ள நிலையில், கார் மற்றும் டூவிலர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகளவில் குறைத்து வருகிறது. இதனால் உற்பத்தி நிறுவனங்களில் அதிகளவிலான ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.
வேலைவாய்ப்பு இழப்பு
சில வாரங்களுக்கும் முன் வெளியான கணிப்புகளில் கார் மற்றும் பைக் உற்பத்தி நிறுவனங்களில் 15,000 ஊழியர்களும், உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் 1,00,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
ஆனால் உண்மையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆட்டோமொபைல் துறையில் சுமார் 3,50,000 பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
இந்தச் செய்தி ஆட்டோமொபைல் துறை மட்டும் அல்லாமல் மற்ற துறைகளையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.