அமெரிக்கா.. பல கோடி இந்திய இளைஞர்களின் கனவு. இதை நினைவாக்க மாதக்கணக்கில் கடுமையான உழைத்துக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து வரும் தொடர் கட்டுப்பாடுகள் சோகத்தை மட்டும் அல்லாமல் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் காக்னிசென்ட் நிறுவனம் சோகத்தில் இருக்கும் இளைஞர்களின் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வந்துள்ளது.
அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபராக டிரம் பதவி உயர்வு பெற்ற பின்பு விசா பெறுவது முதல் கிரீன் கார்டு பெறுவது வரையில் கடுமையான விதிமுறைகள் மட்டும் அல்லாமல் அதிகளவிலான கட்டணத்தையும் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அமெரிக்கச் செல்லும் கனவு உடையவர்கள் சோகத்தில் மூழ்கியது மட்டும் அல்லாமல் லண்டன், ஜெர்மனி நாடுகளை நோக்கிப் பயணிக்கத் துவங்கினர்.
ஆனால் காக்னிசென்ட் காப்பாற்றியுள்ளது.
கிரீன் கார்டு
பொதுவாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் தான் கிரீன்கார்டு பெறுவதற்காக அதிகளவிலான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும். இந்தியாவிலிருந்து சென்ற திறன் வாய்ந்த ஊழியர்களை அமெரிக்காவிலேயே தக்க வைத்து அதிக வர்த்தகம் மற்றும் வருமானத்தைப் பார்க்கவே இதுநாள் வரையில் இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான கிரீன்கார்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தது.
ஆனால் டிரம்ப் தொடர்ந்து விதித்து வரும் கட்டுப்பாடுகளால் ஜகா வாங்கியுள்ளது இந்திய நிறுவனங்கள்.
அமெரிக்க நிறுவனங்கள்
இந்நிலையில் மார்ச் 2019 வரையிலான ஆறு மாத காலத்தில் இந்திய நிறுவனங்களைக் காட்டிலும் அமெரிக்க நிறுவனங்கள் தான் அதிகளவில் கிரீன் கார்டுகக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது. இதில் குறிப்பாக அமேசான், காக்னிசென்ட், சிஸ்கோ ஆகிய நிறுவனங்கள் டிசிஎஸ் நிறுவனத்தை விடவும் அதிக வெளிநாட்டவருக்குக் கிரீன் பெற விண்ணப்பம் கொடுத்துள்ளது.
எண்ணிக்கை
இந்த 6 மாத காலத்தில் அமேசான் 1590 விண்ணப்பங்களையும், அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் அதிக ஊழியர்களை வைத்திருக்கும் காக்னிசென்ட் இந்த 6 மாத காலத்தில் 1,324 விண்ணப்பங்களைக் கொடுத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து சிஸ்கோ 1,058 விண்ணப்பங்களையும், டிசிஎஸ் 1009 விண்ணப்பங்களையும் கொடுத்து டாப் 10 பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதர நிறுவனங்கள்
5வது இடத்தில் 874 விண்ணப்பங்கள் உடன் கூகிள், 562 விண்ணப்பங்கள் உடன் பேஸ்புக், 519 விண்ணப்பங்கள் உடன் இன்போசிஸ், இதைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட், ஆப்பிள், டெலாய்ட் ஆகிய நிறுவனங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
காக்னிசென்ட்
இந்திய ஐடி நிறுவனங்களைப் போலவே காக்னிசென்ட்-ம் அதிக வருமானத்திற்காக இந்திய ஊழியர்களை நம்பி இயங்குகிறது. இதன் படி தற்போது கிரீன்கார்டு-க்காக விண்ணப்பம் செய்துள்ள ஊழியர்கள் அதிகமானோர் இந்தியர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதை நாஸ்காம் அமைப்பு உறுதி செய்துள்ளது, "அமெரிக்காவில் தற்போது அறிவு திறன் வாய்ந்த மக்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவிலான ஊழியர்களை ஈர்த்து வருகின்றனர்" என நாஸ்காம் தெரிவித்துள்ளது.