பெங்களூரு: கடந்த 10 மாதங்களுக்கு இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு சனிப் பெயர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது போல. தொடர்ந்து இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வாகனங்களின் விற்பனை சரிந்து கொண்டே தான் வருகிறது.
இந்த விற்பனைச் சரிவைச் சமாளிக்க முடியாமல் சமீபத்தில் தான் மாருதி சுஸிகி நிறுவனம் தன் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வதாகச் சொன்னது.
இப்போது மாருதி சுஸிகி போல டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்களும் உற்பத்திக் குறைவில் இறங்கப் போவதாக, இன்று சொல்லி இருக்கிறார்கள்.
டாடா & மஹிந்திரா
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய புனே உற்பத்தி ஆலையில் சில பிளாக்குகளில் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு சில மாதங்களுக்கு முன்பே, இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு சவாலான சூழ்நிலை நிலவிக் கொண்டிருப்பதாகச் சொன்னது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் இன்று தன் உற்பத்தியில் எட்டு நாட்கள் முதல் 14 நாட்கள் வரைக்குமான உற்பத்தியை பல உற்பத்தி மையங்களில் குறைத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
3.5 லட்சம் பேர்
இப்படி இந்தியாவின் ஆட்டோமொபைல் வியாபாரத்தில் முன்னணியில் இருக்கும் இரு பெரு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டதால், இந்த இரண்டு நிறுவன பங்குகளின் விலை சுமார் 2 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டிருக்கும் இந்த தேக்க நிலையால், பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் பறி போகத் தொடங்கி இருக்கின்றன. இதுவரை வாகன உற்பத்தியாளர்கள், உதிரி பாகத் தயாரிப்பாளர்கள், டீலர்கள் என குட்டி குட்டி முதலாளிகள் எல்லாம் சேர்ந்து, கடந்த ஏப்ரல் முதல், சுமார் 3.5 லட்சம் பேரை இதுவரை வேலையை விட்டு நீக்கி இருக்கிறார்களாம்.
நடுத்தர நிறுவனங்கள்
இந்த விற்பனை சரிவால், பெரிய பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரிதாக பாதிக்கப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். நடுத்தர மற்றும் சிறிய ஆட்டோமொபைல் தொழில் சார் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறதாம். உதாரணமாக ஜாம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் என்கிற நிறுவனத்தின் தயாரிப்புகளை டாடா மோட்டார்ஸ் தொடங்கி, ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா மோடார்ஸ் என பல முன்னணி நிறுவனங்கள் வாங்கிக் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
வேலை இல்லை
நேற்று (ஆகஸ்ட் 08, 2019, வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்த ஜாம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் "ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டிருக்கும் விற்பனை சரிவால் நாங்கள் எங்கள் ஒன்பது உற்பத்தி ஆலையையும் இந்த ஆகஸ் 2019-ல் மூட வேண்டி இருக்கும் போலிருக்கிறது" என பகிரங்கமாக, அவர்கள் வலியை, வியாபாரம் இல்லாத விரக்தியைச் சொல்லி அனைவரையும் களக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். அதோடு, இந்த ஆகஸ்ட் 2019-ல் , உற்பத்தித் திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து இருக்கிறார்களாம்.
உற்பத்தித் திட்டம்
ஜாம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆலைகள் இயங்காது அல்லது பகுதி மட்டுமே ஆகஸ்ட் மாத வேலை நாட்களில் இயங்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த செய்திகள் வெளியானதால் பங்குச் சந்தையில் இன்று ஜமுனா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் (Jamuna Auto Industries) நிறுவனத்தின் பங்கு விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. ஜமுனா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் (Jamuna Auto Industries) நிறுவனத்தைப் போலவே பாஸ்ச் (Bosch), வாப்கோ (Wabco) போன்ற ஆட்டோமொபைல் துறை சார் நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டிருப்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.