டெல்லி: தொடர்ச்சியான விற்பனை சரிவால், ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அதிகபட்சமாக இருக்கும் வாகனங்களே விற்பனையாகமல் இருக்கும் நிலையில், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளன.
இந்த நிலையில் உன்னாலா நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என்பது போல ஆட்டோமொபைல் துறையில் அதிகளவு உபயோகப்படுத்தப்படும், மூலதனமான இரும்பின் தேவையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
அதோடு நிலவி வரும் பொருளாதார மந்தத்தால், கட்டிடங்கள் கட்டுவதும் குறைந்துள்ளது. இதனால் இரும்பின் தேவை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஸ்டீல் துறையும் தொடர்ந்து தற்போது தொடர்ந்து சரிந்து வருகிறது.
வீழ்ச்சி கண்டு வரும் ஆட்டோமொபைல் துறை
நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வரும் ஆட்டோ மொபைல் துறையால், தற்போது ஸ்டீல் துறையும் சேர்ந்து நலிந்து வருகிறது என்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டி.வி நரேந்திரன் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் இரும்பு தேவை அதிகரிக்க வேண்டும் என்றும், இது கட்டுமான மற்றும் ஆட்டோமொபைல் துறையை வளர்ச்சியை பொறுத்து தான் இது அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார் நரேந்திரன்.
ஆட்டோ மொபைல் துறையில் அதிக நுகர்வு
சி.ஐ.ஐயின் துணைத் தலைவரான நரேந்திரன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களுடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பின் கூறியதாவது, பொதுவாகவே இந்த ஸ்டீல் துறை, பொருளாதாரத்தின் அனைத்து பகுதிகளையும் தொடுகிறது என்று நான் நினைக்கிறேன். அதிலும் ஆட்டோமொபைல் துறையில் மட்டும் 20 சதவிகிதம் நுகரப்படுகிறது என்றும், இது ஸ்டீல் துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இது கடந்த மூன்று மாதங்களில் ஒரு விளையாட்டை நடத்தியுள்ளது என்றும் நரேந்திரன் கூறியுள்ளார்.
பயணிகள் வாகனம் விற்பனை படு வீழ்ச்சி
உள்நாட்டு வாகன விற்பனையானது கடும் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில், அதிலும், பயணிகள் வாகனம் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் SIAM வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையின் படி, கடந்த ஜூன் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் மட்டும் 12.35 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 60,85,406 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலத்தில் 69,42,742 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாகன துறைக்கு ஜி.எஸ்.டி சலுகை வேண்டும்
இந்த நிலையில் கடந்த புதன் கிழமையன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வாகனங்கள் மீதான, ஜி.எஸ்.டி குறித்த சலுகையை கேட்டுள்ளனர். இதையடுத்து சலுகை அங்கீகரிக்கப்பட்டால், ஆட்டோமொபைல் துறையில் தொடரும் இந்த வீழ்ச்சியில் சற்றே மாறுதல் வரலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.