சண்டிகர், இந்தியா: இந்தியாவில் வித்தியாசமான பெற்றோர்களுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. அதுவும் குறிப்பாக பணக்கார பெற்றோர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
18 வயதுக்குள்ளேயே இந்த பணக்காரப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த செல்போன் தொடங்கி BMW கார்கள் வரை அனைத்தையும் வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.
அப்படி ஒரு பணக்காரப் பெற்றோர் தன் மகனுக்காக புத்தம் புதிய BMW காரை பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். அந்த புத்தம் புதிய BMW காரை ஏற்க மறுத்த மகன் கோபத்தில் காரை ஆற்றில் தள்ளி விட்டிருக்கிறார்.
எங்கே
ஹரியானா மாநிலத்தில் யமுனா நகர் பகுதியில் வசிக்கும் ஒரு பெரிய பணக்கார குடும்பம் தங்கள் மகனுக்கு புத்தம் புதிய BMW காரை பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். அந்த செல்வச் செழிப்பான சீமானின் மகனோ பரிசாக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொகுசு ரக காரான ஜாகுவாரைக் கேட்டிருக்கிறார். இப்போதைக்கு இந்த் புதிய மாடல் BMW காரை வைத்துக்கொள் பிறகு ஜாகுவார் வாங்கி தருகிறேன் எனச் சொல்லி இருக்கிறார்கள் அந்தப் பணக்கார பெற்றோர்கள். மகனோ கேட்டதாகத் தெரியவில்லை.
ஜாகுவார் எங்க
தான் கேட்ட ஜாகுவார் காரை வாங்கித் தராததால் தனக்கு புதிதாக பரிசாகக் கிடைத்த BMW காரை ஆற்றில் இறக்கி விட்டிருக்கிறார் அந்த சீமானின் மகன். அதோடு தன்னுடைய புத்தம் புதிய BMW காரை ஆற்றில் இறக்கி விடுவதை படம் பிடித்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தில்லாக பதிவிட்டிருக்கிறார் அந்தப் பணக்காரரின் மகன். ஆற்றில் இறக்கி விட்ட புதிய BMW கார் ஆற்றின் மத்திய பகுதிகளில் இருக்கும் செடி கொடிகளில் சிக்கிக் கொண்டதாம்.
திருப்பி எடு
சிறிது நேரம் கழித்து, அந்த் ஜாகுவார் வெறி பிடித்த, அந்தப் பணக்காரரின் மகன், வந்த BMW காரை ஏன் விடுவானேன் என தன் பெற்றோர் பரிசாகக் கொடுத்த விலை உயர்ந்த BMW காரை மீட்க, உள்ளூர் வாசிகளை வைத்துப் காரை மீட்க போராடியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த விஷயம் யமுனா நகர் பகுதி காவல் நிலையத்துக்கு செய்தி போக, முறையாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்களாம். என்ன வழக்கம் போல அந்த பணக்கார அப்பா, தன் மகனை ஜாமீனில் எடுப்பார். பணத்தின் அருமை தெரியாத அந்த இளைஞனும் வெளியே வந்து விடுவான்.
இத்தனை அவசரம் ஏன்
பணம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்வதா..? சரி BMW காரை ஆற்றில் தள்ளி விட்டாரே, அதை அப்படியே கூட விட மனம் வராமல், மீண்டும் அந்தக் காரை மீட்க போராடி இருக்கிறார். இப்படி எல்லாவற்றையும் அவசர கதியில் செய்வதற்கு பதிலாக, கொஞ்சம் யோசித்திருந்தால் புதிய BMW காரை நிம்மதியாக ஆசை தீர அனுபவித்து இருக்கலாமே..? அப்படி இந்த பணக்கார இளைஞனுக்கு என்ன தான் கோவமோ..?