மும்பை, இந்தியா: HDFC Bank நிறுவனத்தின் ஆதித்யா பூரி தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வங்கி சிஇஓ-வாக இருக்கிறார். இவருக்கு 2018 - 19 நிதி ஆண்டில், ஒரு மாத அடிப்படைச் சம்பளம் 89 லட்சம் ரூபாயாம். HDFC Bank தான் இந்தியாவிலேயே அதிக மதிப்பு கொண்ட வங்கி என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து ஆக்ஸிஸ் பேங்கின் முதன்மைச் செயல் அதிகரி அமிதாப் செளத்ரி வருகிறார். இவர் கடந்த ஜனவரி 2019-ல் தான் ஆக்ஸிஸ் வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரியாக பதவிக்கு வந்தார். இவருடைய மாத அடிப்படைச் சம்பளம் 30 லட்சம் ரூபாயாம். இந்தியாவிலேயே அதிக சொத்து வைத்திருக்கும் மூன்றாவது பெரிய தனியார் வங்கி இந்த ஆக்ஸிஸ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது இடத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் உதய் கோட்டக் வருகிறார். இவருக்கு ஒரு மாத அடிப்படைச் சம்பளம் 27 லட்சம் ரூபாயாம். இவருக்கு அடுத்து ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் வருகிறார். இவருக்கு மாத அடிப்படைச் சம்பளமாக 26 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்களாம்.
ஐந்தாவது இடத்தில் சந்தா கோச்சருக்கு பிறகு ஐசிஐசிஐ வங்கியின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரியாக பதவிக்கு வந்த சந்தீப் பக்ஷி மாதம் 22 லட்சம் ரூபாய் அடிப்படைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறாராம். அவரைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் இண்டஸ் இண்ட் பேங்க் நிறுவனத்தின் ரோமேஷ் சோப்தி (Romesh Sobti) வருகிறார். இவர் மாதம் 16 லட்சம் ரூபாயை அடிப்படைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறாராம்.
முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி போன்ற பதவிகளில் இருப்பவர்களுக்கு சம்பளம் போக, ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் போனஸ் வழங்குவது, அது போல சலுகைகள் வழங்குவது, ஸ்டாக் ஆப்ஷன் என்று சொல்லப்படும் நிறுவனப் பங்குகளை வழங்குவது என பல வழிகளில் பணம் வருமாம். எனவே வங்கியின் அளவைப் பொறுத்து சிஇஓ-க்களின் சம்பளம் அதிகரிக்கும் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள்.
முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் காலத்தில் தான் வங்கி உயர் அதிகாரிகளுக்கு வழங்கும் சம்பளம், சலுகைகள் போன்ற விவரங்கள் அதிகம் பொது வெளிக்கு வரத் தொடங்கியது. குறிப்பாக வாராக் கடன் மற்றும் வங்கியின் லாபம் ஆகியவைகளோடு வங்கி உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கும் சம்பளம் ஒப்பிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.