இந்தியாவிலேயே 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு மதிப்பிடப்படும் சில நிறுவனங்களின் மிக முக்கியமானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். வருடத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றாலும் மிகையில்லை.
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வளர்ச்சியை ஜியோ அறிமுகத்திற்குப் பின் முன் பிரித்துப் பார்த்தால், கிட்டத்தட்ட 3 வருடத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இப்படி வலிமையான நிலையில் இருக்கும் போது எதற்காக 20 சதவீத பங்குகளை முகேஷ் அம்பானி விற்க வேண்டும்..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் வரலாற்றில் அதாவது திருபாய் அம்பானி துவங்கிய காலம் முதல் இன்று வரையில், இந்நிறுவனம் பல புதிய வர்த்தகத்தைத் துவங்கி இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் கூட்டணியிலும், சொந்த முதலீட்டின் வாயிலாகத் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துவங்கியுள்ளது. ஆனால் முதல் முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வரலாற்றில் மாபெரும் அன்னிய முதலீட்டுக்கு முகேஷ் அம்பானி ஒப்புதல் அளித்துள்ளார்.
பெட்ரோல் வர்த்தகம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அஸ்திவாரமான பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகப் பிரிவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு உள்ளார்.
இதுநாள் வரையில் முகேஷ் அம்பானி தான் இருக்கும் துறையிலும், நிறுவனத்திலும் தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதல் முறையாக அன்னிய நிறுவனத்திற்கு வழி விட்டுள்ளார்.
75 பில்லியன் டாலர்
சவுதி ஆராம்கோ முதலீடும் செய்யும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தின் மதிப்பு 75 பில்லியன் டாலர். இது இப்பிரிவின் கடன் நிலுவையும் சேர்த்து மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆராம்கோ வாங்கும் 20 சதவீத பங்குகளின் மதிப்பு 15 பில்லியன் டாலர்.
தேக்கம்
கடந்த சில காலாண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளைக் கவனித்தால், பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையின் வருவாய் மற்றும் லாபம் நிலையான அளவிலேயே உள்ளது பெரிய அளவிலான உயர்வு எதுவும் இல்லை. இப்படி வளர்ச்சி இருந்தால் இது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை மாற்றத்தால் ஏற்பட்டது தான். இப்படிப் பல காலாண்டுகளாக ரிலையன்ஸ் பெட்ரோலியம் வர்த்தகம் தேக்கம் அடைந்துள்ளது.
இதை ஈடு செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் முகேஷ் அம்பானி ஜியோ, ரீடைல் வர்த்தகம் திரும்பினார். தற்போது ஆராம்கோ, BP நிறுவன கூட்டணிகள் ரிலையன்ஸ் நிறுவன பெட்ரோலிய துறை வர்த்தகத்தை மீட்டு எடுக்க வந்துள்ளது.
வரலாற்று நிகழ்வு
ஆராம்கோ நிறுவனத்தின் இந்த 15 பில்லியன் டாலர் முதலீடு ரிலையன்ஸ் வரலாற்றில் மட்டும் அல்ல இந்திய வர்த்தகச் சந்தையிலும் இது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இதுவரை எந்தொரு பன்னாட்டு நிறுவனமும் இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தது இல்லை. சமீபத்தில் வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தை 40 பில்லியன் டாலருக்கு வாங்கியது எல்லோருக்கும் தெரியும், பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியர்களாலும், இந்தியர்களுக்காக இருந்தாலும் அது சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.
மறுப்பு
முகேஷ் அம்பானியே வருடாந்திர கூட்டத்தில் இதைத் தெரிவித்த நிலையில், ஆராம்கோ நிறுவனத் தலைவர்கள் முதலீட்டுக்கான பேச்சு வார்த்தை ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்று கூறியுள்ளனர்.
தற்போதைய நிலவரத்தின் படி, 20 சதவீத பங்கு முதலீடு குறித்து அடிப்படை பேச்சுவார்த்தை மட்டுமே முடிந்துள்ளது. இனி தான் இதைப்பற்றி ஆலோசனை செய்து அடுத்தகட்ட முடிவிற்குச் செல்ல உள்ளோம் என ஆராம்கோ நிறுவனத்தின் நிதியியல் பிரிவின் உயர் துணைத் தலைவர் Khalid al-Dabbagh ராய்ட்டர்ஸ் செய்தி தளத்திற்குக் கூறியுள்ளார்.
கூட்டணி
இக்கூட்டணியில் சவுதி ஆராம்கோ தினமும் 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்-ஐ ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கொடுக்க உள்ளது, இதைக் குஜராத் ஜாம்நகரில் இருக்கும் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிக்கப்பட்டு இந்தியாவிலும், ஆசியாவில் வர்த்தகம் செய்ய ஆராம்கோ-ரிலையன்ஸ் கூட்டணி முடிவு செய்துள்ளது.
ஆராம்கோ
சவுதி அரசு நிறுவனமான ஆராம்கோ இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் முதலீடு செய்து தனது வர்த்தக ஆதிக்கத்தை எப்போதும் இல்லாத வகையில் வலிமைப்படுத்தி வருகிறது. இந்த முயற்சியின் மூலம் அமெரிக்கக் கச்சா எண்ணெய் சந்தையுடன் எளிதாகச் சவுதி போட்டி போட முடியும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆராம்கோ பங்குச்சந்தையில் இறங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிட்டதட்ட 2 டிரில்லியன் டாலர் அளவிற்கு மதிப்பிடப்படும் இந்த நிறுவனம் சர்வதேசச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.