டெல்லி : இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதிலும் பல துறைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. இவற்றையெல்லாம் சீரமைக்க பணபுழக்கத்தை சற்று அதிகரித்தால், சிறிது மாற்றம் வரலாம் என்ற நிலையில், ரிசர்வ் வங்கி, நான்காவது முறையாக வட்டி விகிதத்தை குறைத்தது.
இந்த நிலையில் சில்லறை பணவீக்கமானது, பொருட்களின் விலைவாசி அதிகரித்திருந்த போதிலும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் 3.18 சதவிகிதமாக இருந்த, சில்லறை பணவீக்க விகிதம், கடந்த ஜூலை மாதத்தில் 3.15 சதவிகிதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விகிதமானது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 4.17 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆமாங்க.. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைவாசி அதிகரித்த போதிலும், ஜூலை மாத சில்லறை பணவீக்க விகிதம் குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ Central Statistics Office அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் கடந்த ஜூன் மாதத்தில் 2.25 சதவிகிதமாக காணப்பட்ட உணவுப்பொருட்களுக்கான பணவீக்க விகிதம், ஜூலையில் 2.36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு பணவீக்கத்தை 4 சதவிகிதத்திற்குள் தான் வைத்திருக்க வேண்டும் கூறியுள்ள நிலையில், தற்போது 3.15 சதவிகிதமாகவே உள்ளது.
குறிப்பாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடும் நிதிக் கொள்கை அறிவிப்பில், சில்லறை பனவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அதற்கேற்றவாறு வட்டி விகிதத்தை மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சில்லறை பணவீக்கம் 3.1 சதவிகிதமாக இருக்கும் என்றும், இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதுவே இந்த நடப்பு நிதியாண்டின் பாதியில் இந்த விகிதம் 3.5 முதல் 3.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மேலும் ஏப்ரல் - ஜூன் 2020 வரையிலான காலத்தில் சில்லறை பணவீக்க விகிதம் 3.6 சதவிகிதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் மொத்த உற்பத்தி வளர்ச்சி, நடப்பு 2019 - 2020ம் நிதியாண்டில் 6.9 சதவிகிதமாக இருக்கும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. எனினும் இது முன்னர் 7 சதவிகிதமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
இதற்கு காரணம் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் ஏற்பட்ட வீழ்ச்சியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விற்பனை வீழ்ச்சியால் உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே ரிசர்வ் வங்கி ஜிடிபியை குறைத்துள்ளது கவனிக்கதக்கது.