இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் வருடாந்திர கூட்டம் கடந்த 3 வருடங்களாக முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் சமானிய மக்கள் மத்தியிலும் பெரிய அளவிலான ஈர்ப்பைப் பெற்றுள்ளது. அப்படித்தான் திங்கட்கிழமை நடந்த வருடாந்திர கூட்டமும் அமைந்தது.
சொல்லப்போனால் கடந்த 10 வருடத்தில் திங்கட்கிழமை வருடாந்திர கூட்டம் தான் தலைசிறந்தது எனப் பங்குச்சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். இதன் எதிரொலியாக முகேஷ் அம்பானி ஓரே நாளில் சுமார் 80,000 கோடி ரூபாய்ச் சம்பாதித்துள்ளார்.
ஒரு நாள் வர்த்தகம்
திங்கட்கிழமை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட வருடாந்திர முடிவுகளின் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை ஒருநாள் வர்த்தகத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 80000 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
கடந்த 13 வருடத்தில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் அதிக எண்ணிக்கையில் வர்த்தகமானதும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தான்.
மொத்த விற்பனை
செவ்வாய்க்கிழமை தேசிய பங்குச்சந்தை (NSE) வர்த்தகத்தில் மட்டும் சுமார் 4.79 கோடி பங்குகள் வர்த்தகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை அதிகப்படியாக 12 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகம்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 1,162.10 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், அதிகப்படியாக 1302.80 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 1,226 ரூபாய்க்கும் வர்த்தகம் ஆகியுள்ளது.
கடந்த 52 வாரத்தில் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 1,417.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அளவீடு இன்னும் 2 நாட்களில் அடைந்தாலும் வியப்பு இல்லை.
F&O சந்தை
இதோடு வருடாந்திர கூட்டத்தின் எதிரொலியாக F&O சந்தையில் சுமாப் 27 லட்ச ஆர்டர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதோடு 1.32 லட்ச ஆர்டர்கள் வர்த்தகமாகியுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் மாத பியூச்சர் விலை 9.79 சதவீதம் வரையில் உயர்ந்து 1280 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இதைவிட முகேஷ் அம்பானிக்குக் குத்தாட்டம் போட வேறு என்ன காரணம் வேண்டும்..?