டெல்லி: வாகன துறையில் தொடர்ந்து நீடித்து வரும் வீழ்ச்சியானது, இந்தியாவிலேயே அதிகளவு இரு சக்கர வாகனத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம்.
ஏனெனில் குறைவான தேவையை அடுத்து, இந்த நிறுவனம் தனது அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், கடந்த ஆகஸ்ட் 15 முதல் 18 வரையில், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தின விழா, ரக்ஷா பந்தன், அதை தொடர்ந்து வார இறுதி என நான்கு நாட்கள் விடுமுறை தொடர்ந்து வந்தாலும், இதில் சந்தையின் தேவையும் குறைந்துள்ளதன் எதிரொலி என்றும் கருதப்படுகிறது.
உற்பத்தியை குறைக்க விடுமுறை
ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் இது குறித்து கூறுகையில், வருடாந்திர தேவை குறைந்துள்ள நிலையில் அதை சரி செய்யவும், இது தேவைக்கு ஏற்ப உற்பத்தியை மாற்றுவது வழக்கமான ஒன்று தான் என்றும் கூறியுள்ளது. மேலும் உற்பத்தித் திட்டமிடல் என்பது சந்தையின் தேவையை அறிந்து, தேவையை முன் கூட்டியே கண்கானிக்கும் ஒரு விடயம் என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.
உற்பத்தி திட்டமிடலுக்கு உதவும்
இந்த உற்பத்தி திட்டமிடல் என்பது எங்களுக்கு, முன் கூட்டியே உற்பத்தியை திட்டமிட பயன்படுகிறது. இதனால் உற்பத்தியை சீரமைக்க எங்களால் முடிகிறது என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம். மேலும் ஹூரோ மோட்டோகார்பின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால், இந்த நிறுவனம் தொடர்ந்து அதன் உற்பத்தியும் குறைத்து வருகிறது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், இரு சக்கர வாகன உற்பத்தி 24,66,802 யூனிட்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடும்போது 12.03 சதவிகிதம் குறைந்துள்ளது.
அனைத்து வாகன விற்பனையும் வீழ்ச்சி
கடந்த ஜூலையில் ஹூரோ நிறுவனத்தின் விற்பனை 21.18 சதவிகிதம் குறைந்து, 5,35,810 யூனிட்களாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனை 6,79,862 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹூரோ மட்டும் அல்ல, மற்ற இரு சக்கர வாகனங்களும் குறைந்த தேவையின் காரணமாக விற்பனை இரட்டை இலக்க வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா விற்பனை 10.77 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இதுவே பஜாஜ் ஆட்டோ 13 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், டிவிஎஸ் மோட்டார்ஸ் 15.72 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், ராயல் எண்பீல்டு 22 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆண்டின் பிற்பகுதியில் தேவை அதிகரிக்கலாம்
மேலும் ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம், தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், விற்பனையிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. ஆக முதல் காலாண்டினைப் போலவே, இரண்டாவது காலாண்டின் ஆரம்பத்திலும் இதே பிரச்சனை தொடருகிறது என்றும் கூறியுள்ளது. எனினும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பருவமழை மற்றும் பண்டிகை காலங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தேவையும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.