அனில் அம்பானிக்கு சமீப காலமாக எல்லா இடங்களிலும் தோல்வி தான். போதாக்குறைக்கு கடன் நெருக்கடி வேறு சிரமப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதற்கு மேல் திவாலாகும் நிறுவனம், வியாபாரம் இல்லாமல் தவிக்கும் நிறுவனங்கள் எனக் கண்ணீர் விடாத குறையாகத் தவித்துக் கொண்டு இருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனில் அம்பானியே மகிழ்ச்சி அடைய ஒரு விஷயம் கிடைத்துள்ளதால் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சி விட்டுக் கொண்டிருக்கிறார்.
ரிலையன்ஸ் கேப்பிடல்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 4 மடங்கு அதிக லாபம் பெற்றுள்ளது.
ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் கேப்பிடல் சுமார் 1, 218 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 295 கோடி ரூபாயாக இருந்தது.
வருமானம்
இந்த கால கட்டத்தில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் வருமானம் 31 சதவீதம் வரையில் அதிகரித்து 6,083 கோடி ரூபாயாக இருக்கிறதாம். கடந்த நிதி யாண்டில் இதன் அளவு 4, 641 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்கள் கழித்து அனில் அம்பானியின் ஒரு நிறுவனம் அதிக வருமானம் ஈட்டியதைப் பற்றிப் பேசப்படுவது தான் செய்தி.
நிறுவன மதிப்பு
மேலும் அனில் அம்பானி தலைமையின் கீழ் நிர்வகிக்கப்படும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் மதிப்பு கடந்த வருடம் 83, 973 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 79, 207 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இக்காலாண்டில் பொதுச் சந்தையிலிருந்து எவ்விதமான வைப்பு நிதியையும் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வருடாந்திர முடிவு
2018-19 நிதி ஆண்டில் அனில் அம்பானியின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் கேப்பிடல் 1,454 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. லாபம் 4 மடங்கு உயர்ந்திருந்தாலும், நிறுவனத்தின் மதிப்பு குறைந்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளைச் செய்யத் தயங்கி வருகின்றனர். இதனால் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் மதிப்பில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் இல்லை.