நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த கடந்த ஆட்சியில் மோடி கையில் எடுத்த ஜிஎஸ்டி, IBC சட்ட திருத்தங்கள், அன்னிய முதலீட்டுக் கொள்கை தளர்வுகள் ஆகியவை பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை. இதுமட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வியப்புக்குரிய அளவிற்குப் பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை.
இப்படி இருக்கையில் அடுத்த 5 வருடத்தில் இந்தியாவை 5 டிரில்லியன் மதிப்புடைய பொருளாதார நாடாக மாற்ற மோடி அரசு சபதம் செய்துள்ளது. இது நடக்குமா? நடக்காத? என்பதற்கான விவாதம் தற்போதைய மோசமான வர்த்தகப் பொருளாதாரச் சூழ்நிலைக்குத் தேவையற்றது. நலிவடைந்து கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை உடனடியாகச் சரி செய்ய வேண்டியவற்றைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
ஏற்கனவே நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில் இது தற்போது வளர்ச்சிக்குச் சாதகமாக உள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் உதவி இப்போதைக்கு இந்திய பொருளாதாரத்திற்குத் தேவையில்லை. இதைத் தாண்டி மோடி உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்றங்களை இப்போது பார்ப்போம்.
1. பணக்காரர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். இந்தி இந்தியச் சந்தையில் முதலீடு செய்ய வரும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஒரு தடையாக உள்ளது.
2. அனைத்துத் தரப்பு நிறுவனங்களுக்குமான கார்ப்பரேட் வரியை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
3. பங்குச்சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் 35 சதவீத பங்குகளைப் பொது வர்த்தகச் சந்தையில் வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் திரும்பப் பெற வேண்டும்.
4. அரசு பத்திரங்கள் மூலம் நிதியை ஈட்டுவதை விடுத்து வங்கிகளின் வாயிலாகப் பணத்தைப் பெறலாம். இதேபோல் SLR விகிதத்தைக் குறைக்க வேண்டும்.
5. NBFC நிறுவனங்களை உடனடியாக ஆய்வு செய்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும்.
6. மோசமான நிலையில் இருக்கும் வீட்டு வசதி மற்றும் ஆட்டோமொபைல் துறைக்குத் தக்க நிதி உதவியைச் செய்து, தற்காலிக வளர்ச்சியைக் கொண்டு வரலாம்.
7. ஈகாமர்ஸ் வர்த்தகம் மீது விதிக்கப்பட்டு உள்ள தடைகளை அதிரடியாகத் தளர்க வேண்டும்.
8. தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டுமான நிதியத்திற்கு நிதி சேர்க்கும் வகையில் உடனடியாக அரசு நிறுவனங்களில் மத்திய அரசு வைத்துள்ள பங்கு அளவுகளைக் குறைக்க வேண்டும்.
9. சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள ஊழியர் சட்டங்கள் மற்றும் PF விதிகள் தற்காலிகமாகத் தளர்க வேண்டும்.
10. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள உள்கட்டுமான திட்டத்திற்கு நிதி திரட்டவும், புதிய திட்டங்களையும் அறிவிக்க வேண்டும்.
11. ஜிஎஸ்டி வரி அளவுகளை உடனடியாகக் குறைத்து இந்தியாவில் வர்த்தகச் சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும்.
12. புதிய வியாபாரிகள், மற்றும் நிறுவனங்களை ஈர்க்க எளிதான அனுமதி மற்றும் இதர சேவைகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
13. இந்தியாவில் புதிதாகக் குறைந்தபட்சம் 20 சிறப்புப் பொருளாதார இடங்களை அமைக்க வேண்டும்.
14. தற்போதைய நிலையில் IBC விதிகளுக்குக் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ள நிறுவனங்களுக்கு முடிவை விரைவில் எட்ட வேண்டும். அதிகளவிலான கால தாமதத்தைத் தவிர்க்க வேண்டும்.
15. அரசு கல்வி கொள்கையைச் சரியான முறையில் வகுக்க வேண்டும். தரமான கல்லூரிகள் மற்றும் கல்வி முறைகளைத் தென் மாநிலங்களில் உதாரணமாகக் கொண்டு வட மாநிலங்களில் கொண்டு வர உத்தரவிட வேண்டும். அதன் பின் கல்வி சீர்திருத்தங்களை அமலாக்கம் செய்ய வேண்டும்.