மத்திய அரசின் பணமதிப்பிழப்புக்குப் பின் தொடர்ச்சியாக டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு "டிஜிட்டல் இந்தியா" என்கிற பெயரில் ஒரு புதிய திட்டமே தொடங்கி இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க போராடிக் கொண்டிருக்கிறது.
இதை மத்திய அரசும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை பெரிய அளவில் முன்னெடுத்து வருகிறார்கள்.
அவ்வளவு ஏன் சின்ன சின்ன வியாபாரிகள் கூட ஆன்லைன் பேமெண்ட் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
திருட்டு
இப்படி டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, ஆன்லைனிலேயே பணத்தைத் திருடி சொகுசு வாழ்கை வாழும் திருடர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை ஒவ்வொரு வேஷம் போடும் இந்த ஆன்லைன் திருடர்கள் இந்த முறை கஸ்டமர் கேர் வேஷம் கட்டி திருடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இனி வாடிக்கையாளர் சேவை தொடர்பாக இணையத்தில் எண்களைத் தேடும் போதும் மிக கவனமாகத் தேடவும்.
பெங்களூரு
இந்தியாவின் ஸ்டார்ட் அப் சிட்டி என்று செல்லமாக இன்றைய இளைஞர்களால் அழைக்கப்படும் பெங்களூரு நகரத்திலேயே கஸ்டமர் கேர் போல பேசி ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்த மொத்தப் பணத்தையும் வழித்து எடுத்திருக்கிறார்கள் திருடர்கள். இந்த பெங்களூரு பெண் சொமேட்டோ கஸ்டமர் கேர் நிறுவனத்திடம் ரீ ஃபண்ட் வாங்குவதற்காக இணையத்தில் சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மைய எண்ணைத் தேடி இருக்கிறார். ஒரு எண் கிடைத்திருக்கிறது. அந்த எண்ணுக்கு அழைத்துப் பேசி தன் வங்கிக் கணக்குக விவரங்களை எல்லாம் கொடுத்து ரீ ஃபண்ட் க்ளெய்ம் செய்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் காலி.
சென்னை
இப்படி ஒரு சம்பவம் சென்னை பெரு நகரத்தில் இதை விட மோசமான சம்பவங்கள் நடந்திருக்கின்றனவாம். சென்னைவாசி ஒருவர் சொமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை கூகுளில் தேடி, இதே போல பேசி இருக்கிறார். அந்த திருடர்களும் ரீ ஃபண்ட் கொடுக்கும் கஸ்டமர் கேர் போலவே நயவஞ்சகமாக பேசி வங்கிக் கணக்கு எண் தொடங்கி யூபிஐ ஐடி, யூபிஐ பின், சில கடவுச் சொல் என பல விவரங்களையும் வாங்கிவிட்டார்களாம். கொஞ்சம் சந்தேகம் வந்த பின் தான் மனிதர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டார். அதன் பின் திருடர்கள் ஓடிபி கேட்டிருக்கிறார்கள். போலி ஓடிபி கொடுத்து தப்பித்து இருக்கிறார். அதன் பின் 5,000 ரூபாய் பணப் பரிவர்த்தனை தோல்வி அடைந்ததாக எஸ் எம் எஸ் வந்திருக்கிறது.
சொமேட்டோ தரப்பு
இது போன்ற பிரச்னைகளைச் சொல்லி காவல் நிலையத்தில் சொமேட்டோ நிறுவனம் புகார்களும் கொடுத்து இருக்கிறதாம். கஸ்டமர் கேர் போலப் பேசி பணம் பறிக்கும் பிரச்னை கடந்த சில மாதங்களாக பார்க்க முடிகிறது. கஸ்டமர் கேர் போலப் பேசி, வாடிக்கையாளர்களின் டெபிட் கார்ட் அல்லது க்ரெடிட் கார்ட், வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள், அதையும் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு வரும் ஓடிபி வரை வாங்கி விடுகிறார்களாம். அவ்வளவு ஏன் இது போன்ற பிரச்னைகள் பிஎஃப் அலுவலகங்களில் கூட நடந்து இருக்கிறதாம்.
ஜாக்கிரதை மக்களே
அமூல் நிறுவனத்தின் பெயரில் சில தேவை இல்லாத விளம்பரங்கள் வந்து கொண்டிருந்ததால், சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவின் முன்னணி பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமூல், கூகுள் நிறுவனத்துக்கு லீகஸ் நோட்டீஸ் அனுப்பியதாம். இப்படி பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரிலேயே மோசடி செய்யும் திருடர்களை, நிறுவனங்களாலேயே சமாளிக்க முடியாத போது, நம்மைப் போன்ற தனி மனிதர்கள் எப்படி இந்த மாதிரியான பிரச்னைகளை சமாளிப்பது என்ரு தான் தெரியவில்லை..! கூடுமான வரை உஷாராக இருங்கள் மக்களே..!