டெல்லி : சர்வதேச அளவில் நிலவி வரும் சாதகமற்ற காரணிகளால் உள்நாட்டு சந்தையும், சர்வதேச சந்தையும் தொடர்ந்து அதிகளவு ஏற்றத்தை காணவிட்டாலும், அதிகளவிலான சரிவையே கண்டு வருகின்றன.
இதனால் இந்திய சந்தைகளிலும் சாதகமற்ற நிலையே நிலவி வருகிறது. ஒரு புறம் சர்வதேச சந்தையில் நிலவும் பல காரணிகளால், இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய சந்தைகளிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாதியில் 8,319 கோடி ரூபாய் முதலீட்டினை, அன்னிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
மேலும் இந்தியாவில் அன்னிய முதலீட்டாளர்களுக்கான வரி அதிகம் உள்ளது என்ற நிலையும் நிலவி வருகிறது. இது குறித்தான வரி குறைப்பு கடந்த பட்ஜெட்டிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரை, இந்த வரி குறைப்பு பற்றிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் அன்னிய முதலீட்டாளர்களிடையே இது கவலையினையே ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிகளவிலான முதலீடுகள் வெளியேற இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆக்ஸ்ட் 1 முதல் 16 வரையிலான காலத்தில் மட்டும் 10,416 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, அன்னிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனராம். எனினும் இதே நேரம் 2,096.38 கோடி ரூபாயை கடன் பத்திரங்களின் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு கடந்த 10 டிரேடிங் செசன்களில், 9 செசன்களில், அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது பங்கினை அதிகளவில் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது சந்தையில் நிலவி வரும் மிக மோசமான சென்டிமென்ட் தான், இதற்கு காரணம் என்றும் மார்னிங் ஸ்டார் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் Himanshu Srivastava கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஜூலை மாதத்தில், இந்தியன் கேப்பிட்டல் மார்கெட்டிலிருந்து 2,985.88 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், இந்திய சந்தைகளிலும் மந்தமான நிலையே நிலவி வருகிறது. இதுதவிர அன்னிய முதலீடுகளுக்கான அதிகப்படியான வரியும், அதிகப்படியான சர்ஜார்ஜூம் அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேற காரணமாக உள்ளதாகவும் Himanshu Srivastava கூறுகிறார்.
இது தவிர அமெரிக்கா சீனா இடையே நிலவும் பிரச்சனையும், காஷ்மீர் பிரச்சனையால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையும், மேலும் இந்திய சந்தைகளில் அழுதத்தை தருகின்றன.