சென்னை : கடந்த நிதியாண்டில் 8,843 கோடி ரூபாய் வருவாய் கொண்ட தமிழகத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர் சங்கமான, ஆவின் பால் நிறுவனம், கடந்த 2018 - 2019ம் ஆண்டில் சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2.06 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறதுதாம். இந்த உற்பத்தியானது நாடு முழுவதிலும் உள்ள 12,585 பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்களின் மூலம் சுமார் 20.30 லட்சம் விவசாயிகளும் உறுப்பினர்களாக உள்ளனராம்.
இந்த நிலையில், சுமார் 25 லட்சம் லிட்டர் பால், வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படுகிறதாம்.
பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காரணம் பசுந் தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனங்களான தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலை மற்றும் இதர இடு பொருட்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் வெகுவாக உயர்ந்துள்ளன. இதனால் பால் கொள்முதல் விலையையும் உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் தற்போது பாலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பால் விலை அதிகரிப்பு
பால் உற்பத்தியானது கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாலும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையிலும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி, 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாகவும், இதுவே எருமைப்பால் முதல் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து, 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நாளை முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது
இந்த விலை உயர்வானது வரும் திங்கட்கிழமை முதல் (19.8.2019 ) அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடைசியாக அரசு கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தியது. அப்போது பச்சை, நீலம், ஆரஞ்சு, மெஜந்தா நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என்றும், அனைத்து ஆவின் பால் விலையும் லிட்டருக்கு ரூ.10 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்கலாம்
இந்த நிலையில் தான், தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஆவின் பால் விலை உயர்ந்துள்ளது. இதன் படி இனி நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) ஒரு லிட்டர் பால் அட்டைக்கு ரூ.40 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.43 ஆகவும், பச்சை (சமன்படுத்தப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.45 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.47 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவே
ஆரஞ்சு (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.49 ஆகவும், சில்லரை விற்பனையில் ரூ.51 ஆகவும், மெஜந்தா (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.41 ஆகவும் உயர்ந்து உள்ளது கவனிக்கதக்கது. இதைத் தொடர்ந்து ஆவினின் மற்ற பொருட்களான வெண்ணெய், நெய், ஸ்வீட்ஸ், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.