பிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் சரியாகத் திட்டமிடப்படாத பல்வேறு திட்டங்களை அமலாக்கம் செய்த காரணத்தால் நாட்டின் பொருளாதாரமும், பொருளாதார வளர்ச்சியும் பெரிய அளவிலான வீழ்ச்சி அடைந்தது. இந்த வீழ்ச்சி சரி செய்ய என்ன செய்யலாம் என யோசிக்கும் முன்பே 2019 தேர்தல் வந்துவிட்டது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் இந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாட முடியாமல் மோடி அரசு சோகத்தில் உள்ளது.
இதற்குக் காரணம் இந்தியா பொருளாதாரத்தை எப்படி மீட்டுக் கொண்டு வருவது எனத் தெரியாமல் இருப்பது தான். இப்படி இருக்கையில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வரவும், வர்த்தகத்தைச் சந்தையில் அதிக வர்த்தகமும், பணப்புழக்கத்தையும் கொண்டு வரும் நோக்கில் சில நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை அதிரடியாக 35 அடிப்படை புள்ளிகள் குறைத்தது.
இதற்கு அடுத்தபடியாக மோடி தலைமையிலான மத்திய அரசு வர்த்தகக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது.
இரும்பு கரம்
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது, இத்தகைய நிறுவனங்களிடம் இருந்து இரும்பு கரம் கொண்டு கடனை வசூலிக்கத் திட்டமிட்டு Insolvency and Bankruptcy Code என்கிற ஐபிசி வரை முறை கொண்டு வரப்பட்டது.
இந்த வரைமுறை கீழ் தற்போது பல நிறுவனங்களின் கடன்களைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஐபிசி வரைமுறை
ஐபிசி திட்ட வரைவின் கீழ் குறைந்த அளவில் கடன் பெற்றவர்களின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இப்பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவித்தார்.
ஐபிசி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் இந்தக் கடன் தள்ளுபடி பல ஆயிரம் நிறுவனங்களுக்குப் புதிய துவக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது.
இன்ஜீத் ஸ்ரீநிவாஸ்
கார்ப்பரேட் விவகார துறை செயலாளர் இன்ஜீத் ஸ்ரீநிவாஸ் இதைப்பற்றி மைக்ரோபைனான்ஸ் துறையினரிடம் ஆலோசனை செய்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் பெற்றுள்ள சிறு கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய என்ன வரையறை வைக்க வேண்டும்..? அது யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும்..? போன்ற பல முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்துள்ளார்.
5 வருடம்
இதுமட்டும் அல்லாமல் இந்தச் சலுகை இந்தியா முழுவதிலும் அமலாக்கம் செய்யப்படும் என்றும், இந்தக் கடன் தள்ளுபடி சலுகையை ஒரு முறை பெற்றால் அடுத்த 5 வருடத்திற்குப் பெற முடியாது என்று தெரிவித்துள்ளார். இத்திட்டம் அடுத்த 3 முதல் 4 வருடத்திற்குச் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக இன்ஜீத் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது அளிக்கப்படும் சலுகை 4 வருடத்திற்கும் சேர்ந்து 10000 கோடி ரூபாய் மேல் தாண்டாது என்றும், இது மைக்ரோபைனான்ஸ் துறையின் வலிமை மற்றும் வளர்ச்சியை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் திட்டமிடப்பட உள்ளதாக இன்ஜீத் ஸ்ரீநிவாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடிப்படை விதிகள்
ஐபிசி விதிகளின் படி "புதிய துவக்கம்" என்கிற கடன் தள்ளுபடி சலுகையைப் பெற ஒருவரது வருடாந்திர வருமானத்தின் அளவு 60,000 ரூபாயை தாண்டக் கூடாது. இதேபோல் தொழில்களுக்காகக் கடன் வாங்கியவர்களின் மொத்த வர்த்தகம் சார்ந்த சொத்து மதிப்பு 20,000 (அதாவது இயந்திரம் போன்ற வர்த்தகம் சார்ந்த உபகரணங்களின் மதிப்பு) ரூபாயைத் தாண்டக் கூடாது. இதேபோல் கடன் அளவு 35,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.
இவை அனைத்து விதிகளையும் ஈடு செய்தால் மட்டுமே கடன் தள்ளுபடி பெற முடியும்.
மாற்றம்
தற்போது இந்த விதிகள் தளர்த்தவும் வாய்ப்புகள் உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் இந்தியாவில் இருக்கும் பல ஆயிரம் குடிசை தொழில் செய்பவர்கள் கடன் தள்ளுபடி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 10000கோடி ரூபாய் கடனை இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்வதன் மூலம் இத்துறையின் வளர்ச்சிக்கு இது உந்து சக்தியாக விளங்கும்.


Click it and Unblock the Notifications