டெல்லி : பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு இது போதாத காலம் போல, எது எடுத்தாலும் தொடர்ந்து நஷ்டத்திலேயே சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர், இந்த நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பெருத்த அடியை வாங்கியது என்றே கூறலாம்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பேமென்ட் வங்கியான, Airtel Payment Bankகும் பெருத்த நஷ்டத்தினை கண்டுள்ளது.
தொடர்ந்து தொலைத்தொடர்பு சேவையில் நஷ்டத்தினை கண்டு வரும் பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு, அதன் பேமென்ட் வங்கி சேவையிலும் தொடர் நஷ்டத்தினை கண்டு வருவது, மேலும் பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
தொடர் நஷ்டம்
கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில், வரிக்கு முந்தைய நஷ்டம், 338.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டெல்லியை தளமாக கொண்ட இந்த வங்கி கடந்த நிதியாண்டில், வரிக்கு முந்தைய நஷ்டமாக 272.6 கோடி ரூபாயாக காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. எப்படி எனினும் இந்த பேமென்மென்ட் வங்கியின் வருவாய் சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடும்போது வருவாய் 59 சதவிகிதம் அதிகரித்து, 254 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 160 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் தனித்துவமான பரிவர்த்தனை நிலையங்கள் உண்டு
இந்த பேமென்ட் வங்கியில் கடந்த ஆண்டு உள்நாட்டு நிதி பணப்பரிமாற்றம் 14,300 கோடி ரூபாயாகவும், இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில் 6,600 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மார்ச் 31, 2019ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் செலுத்தும் உரிமத்தை பெற்ற முதல் நிறுவனமான ஏர்டெல் பேமென்ட் பேங்க், 4,500 வங்கியில்லாத விற்பனை நிலையங்களில், 1.63 கோடி சேமிப்பு கணக்குகளையும், இதுதவிர 1,52,541 தனித்துவமான பரிவர்த்தனை விற்பனை நிலையங்களையும் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் 3 கோடி வாடிக்கையாளர்கள்
பார்தி ஏர்டெல்லும் கோடாக் மகேந்திரா வங்கியும் இணைந்துள்ள இந்த, ஏர்டெல் பேமென்ட் வங்கியானது, நாடு முழுவதிலும் 3 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மேலும் 5,00,000 லட்சம் வங்கி மைங்களைக் கொண்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜூன் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு பிரிவில், 2,866 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது என்றும், இது முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 97.30 கோடி ரூபாய் லாபத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்லுக்கு ஜியோவால் பெருத்த நஷ்டம்
இதற்கு முக்கிய காரணம் முகேஷ் அம்பானியின் ஜியோ வருகைக்கு பின்னர் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுமே தொடர்ந்து சரிவைக் கண்டாலும், ஓரளவுக்கு ஜியோவுக்கு ஈடுகொடுத்து களத்தில் நின்றது பார்தி ஏர்டெல் மட்டுமே. இந்த நிறுவனமும் பெருத்த நஷ்டத்தினை காண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 5 சதவிகிதம் அதிகரித்து, 20,737.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு முதல் காலாண்டில் 19,799.20 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.