இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்த நிறுவனத்தை நந்தன் நிலக்கனி, ஷிபுலால், கோபாலகிருஷ்ணன் என பலரும் சேர்ந்து தொடங்கினார்கள்.
அவர்களுள் முக்கியமானவர் நாராயண மூர்த்தி. நாராயண மூர்த்தி என்றால் பலருக்கும் தெரியாது. ஆனால் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
அந்த அளவுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனமும் நாராயண மூர்த்தியும் பெயரிலேயே பின்னிப் பிணைந்துவிட்டார்கள். சமீபத்தில் நம் நாராயண மூர்த்தி அவர்கள் செயிண்ட் சேவியர் கல்லூரியில் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பேசி இருக்கிறார்.
ஒரு ஃபோன் கதை
நாங்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கும் காலங்களில், அதாவது 1980-களில் இந்தியாவில் டெக்னாலஜி பூம் எல்லாம் நடக்கவில்லை. ஒரே ஒரு ஃபோன் இணைப்பை வாங்க எங்களுக்கு சுமார் 7 வருடங்கள் ஆனது. அந்த காலங்களில் எல்லாம் ஃபோன் இணைப்பைக் கொடுக்க முதலில் அரசு அதிகாரிகளுக்கும், இரண்டாவது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்குமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என செயிண்ட் சேவியர் மாணவர்களை மிரட்சி அடையச் செய்து இருக்கிறார்.
இந்திரா காந்தி
அதோடு முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி எம் ஸ்டீஃபனின் கதையையும் சொல்லி இருக்கிறார். சிலர் அமைச்சர் ஸ்டீஃபனிடம் தங்களின் ஃபோன்கள் வேலை செய்யவில்லை எனப் புகார் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அமைச்சரோ பிரதமர் இந்திரா காந்தியின் ஃபோனே வேலை செய்யவில்லை என பதில் கொடுத்தாராம். இப்படி தகவல் தொழில்நுட்பம் 1980-களில் மிகவும் சிரமமாக இருந்ததாகச் சொன்னார்.
பயணங்கள்
தகவல் பரிமாற்றங்கள் ஒருபக்கம் இருக்க, இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு கம்ப்யூட்டர்களை வாங்கவே அத்தனை சிரமங்களாக இருந்ததாம். 1980 கால கட்டங்களில் ஒரு கம்ப்யூட்டரை இறக்குமதி செய்யத் தேவையான உரிமங்களை வாங்க சுமாராக 50 முறை டெல்லிக்கு பறக்க வேண்டும், அதற்கு சுமார் 3 ஆண்டுகள் வரை ஆகுமாம். அப்போது எல்லாம் 1,00,000 டாலர் விலை உள்ள கணிணியை இறக்குமதி செய்வதற்கு முன்பே இது போன்ற பயணங்களுக்கு 1,00,000 டாலரைச் செலவழிக்க வேண்டி இருக்குமாம்.
ஆர்பிஐ உத்தரவு
இதை எல்லாம் விட வெளிநாடுகளுக்கு எல்லாம் இஷ்டத்துக்கு பறக்க முடியாதாம். எப்படிப்பட்ட அவசரமான, வியாபாரம் தொடர்பான கூட்டமாக இருந்தாலும், சுமார் 3 வார காலத்துக்கு முன்பே ஆர்பிஐ-யிடம் வெளிநாடு செல்ல விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அனுமதித்தால் சரி இல்லை என்றால் போக முடியாது. இதை எல்லாம் கடந்து வெளிநாடுகளுக்குச் சென்று வந்த பின் ஒரு ஸ்டோர் அறிக்கையைச் சமர்பிக்க வேண்டுமாம்.
அந்த நான்கு பேர்
இத்தனை பொருளாதார சிக்கல்களும் மாறின. அந்த பெரிய பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர்கள் பி வி நரசிம்ம ராவ், மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா, ப சிதம்பரம் ஆகிய நால்வர்கள் தான் என பாராட்டி இருக்கிறார். நாம் சுதந்திரம் அடைந்து 45 ஆண்டுகளில் செய்யாததை, இந்த நான்கு பேரும் ஒரு வாரத்தில் செய்து முடித்தார்கள் என உளமாற பாராட்டி இருக்கிறார் நம் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி.