மும்பை: "கெட்டது நடக்கப் போகுது" என இந்தியா மற்றும் சீனா போன்ற பெரிய பொருளாதாரங்கள் இருக்கும் ஒட்டு மொத்த ஆசிய கண்டத்துக்கே எச்சரிக்கை விடுத்திருக்கிறது மெக்கன்ஸி.
குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவை அடிக்கோடு போட்டு எச்சரித்திருக்கிறது. மெக்கன்ஸி (McKinsey) நிறுவனம் நிர்வாகம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது. சுமார் 90 ஆண்டுகள் துறை சார் அனுபவம் கொண்ட நிறுவனம்.
கடந்த இருபது ஆண்டுகளாக ஆசிய பிராந்தியம் முழுக்க கடன் என்கிற பொருளாதார பிரச்னை பிடித்து இருக்கிறது. அதனால் இப்போது சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது என பயமுறுத்துகிறது மெகன்ஸி.
கடன் சுழல்
இந்தியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்டு இருக்கும் அழுத்தம், கடன் கொடுப்பதில் உள்ள சிக்கல்கள், இதற்கு எல்லாம் முத்து வைத்தாற் போல தலை விரித்தாடும் நிழல் வங்கிப் பிரச்னைகள் போன்றவைகளை ஆசியாவில் கடன் பிரச்னை தலை விரித்தாடுவதற்கு முக்கிய காரணமாக தன் ஆகஸ்ட் மாத அறிக்கையில் சொல்லி இருக்கிறது மெகன்ஸி.
முதலீட்டில் தயக்கம்
ஜாய் தீப் சென் குப்தா மற்றும் அர்சனா சேஷாத்ரிநாதன் ஆகியோர் எழுதி இருக்கும் இந்த ஆகஸ்ட் மாத அறிக்கையில் உலக பொருளாதார மந்த நிலை காரணிகளால் ஆசிய நிறுவனங்களின் வருமானங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதையும் குறிப்பிட்டு எச்சரித்து இருக்கிறார்கள். அதோடு அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரினால் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ரிஸ்கை எடுப்பதற்கும் முதலீட்டாளர்கள் தயங்குவதையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
23,000 நிறுவனங்கள்
மெகன்ஸி நிறுவனம், 11 ஆசிய - பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 23,000 நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளை ஆய்வு செய்து இருக்கிறார்களாம். அதில் இந்தியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள், தாங்கள் வாங்கிய கடனைச் திருப்பிச் செலுத்துவதில் பெரிய அழுத்தத்தில் இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். மிக குறிப்பாக, கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து இந்தியா மற்றும் சீன நிறுவனங்களில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இருக்கும் அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
வட்டிப் பிரச்னை
குறிப்பாக Interest Coverage Ratio பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறது மெகன்ஸி. அதென்ன Interest Coverage Ratio..?
எடுத்துக்காட்டு 1
சூத்திரம் = மொத்த வருமானம் (EBIT) / வட்டிச் செலவீனங்கள்
ஒரு நிறுவனம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது இந்த நிறுவனம் வாங்கி இருக்கும் கடன் தொகைகளுக்கு வட்டியாக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்துகிறது என்று வைத்துக் கொண்டால், interest coverage ratio = 1.
எடுத்துக்காட்டு 2
இதுவே ஆண்டுக்கு 2.75 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. ஆனால் கடனுக்கு செலுத்தும் வட்டித் தொகை 1.25 கோடி ரூபாய் என்றால் Interest Coverage Ratio = 2.2.
எப்படி இருக்க வேண்டும்
பொதுவாக உலக அளவில் இந்த Interest Coverage Ratio என்பது 1.5-க்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், ஒரு நிறுவனத்தின் வியாபாரம் வழியாக போதுமான வருமானம் வருகிறது, அந்த நிறுவனம் நிலையாக எதிர்காலத்தில் இயங்கும் எனச் சொல்ல முடியும். இந்த Interest Coverage Ratio 1.5-க்குக் கீழ் இருந்தால் நிறுவனம் தன் அன்றாட கடன்களுக்கான வட்டிச் செலவுகளைச் செலுத்தவே போராடுகிறது என்று பொருள். தற்போது ஆசிய நாடுகளில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்களின் Interest Coverage Ratio 1.5-க்குக் கீழ் தான் இருக்கிறது என்பது தான் பிரச்னை.
விளைவுகள் 1
1. Interest Coverage Ratio 1.5-க்குக் கீழ் பெரும்பாலான ஆசிய நிறுவனங்கள் இருப்பதால், நிறுவனங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பெரிய தொகை கடனுக்கான வட்டிக்கே செலவாகி விடும்.
2. எனவே மேற்கொண்டு புதிதாக வியாபார விரிவாக்கம், புதிய திட்டங்கள் எல்லாம் கொண்டு வர போதுமான பணம் இருக்காது.
3. புதிய திட்டங்கள், விரிவாக்கம் எல்லாம் நடக்காத போது, பொருளாதாரத்தில் போதுமான வேலைவாய்ப்புகள் கிடைக்காது.
பிறகு என்ன
4. வேலை வாய்ப்புகள் இல்லாத போது, மக்கள் கையில் பணம் இருக்காது. அதனால் தங்கள் நுகர்வுத் தேவையைக் குறைத்துக் கொள்வார்கள்.
5. நுகர்வுத் தேவை குறைவதால் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் விற்பனை சரிந்து, வருமானம் குறையும்.
6. நிறுவனங்களுக்கு வரும் குறைந்த வருமானத்தில், வாங்கி இருக்கும் கடனுக்கான வட்டித் தொகையைச் செலுத்தவே போராட வேண்டி இருக்கும். இந்த பொருளாதார பிரச்னைகள் மீண்டும் பாயிண்ட் நம்பர் 2-ல் இருந்து தொடங்கும்...!
அரசு
இப்படி ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் விதத்தில் மெகன்ஸி எச்சரித்து இருக்கும் கடன் பிரச்னை நம் இந்தியாவிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அரசு தான் எதையாவது செய்து, இந்த சிக்கலில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் மத்திய அரசோ, இப்போது வரை பொருளாதார மந்த நிலையில் தவித்துக் கொண்டு இருப்பதை உணர்ந்ததா என்று கூடத் தெரியவில்லை. உணர்ந்து கொண்டு நல்ல முடிவு எடுத்து மக்களைக் காப்பாற்றினால் சரி..!