சர்வதேச நாடுகளில் எலக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்த முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களைத் தயாரித்து உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் மாபெரும் வர்த்தகத் தளத்தை இந்தியாவில் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்காக 2025ஆம் ஆண்டுக்குள் 6 ஜிகாவாட் தளமும், 2030இல் 12 ஜிகாவாட் தளத்தையும் உருவாக்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகிறது.
டெஸ்லா
இந்த மாபெரும் திட்டத்தை இந்தியாவில் உருவாக்க அமெரிக்காவின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் சீனாவின் Amperex டெக்னாலஜி நிறுவனங்கள் நம்நாட்டில் உற்பத்தி ஆலையை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் லித்தியம் அயான் பேட்டரிகளைத் தயாரிக்கும் மாபெரும் தொழிற்சாலை அமைக்கப்படும் நிலையில், சுமார் 50000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இத்திட்டத்தில் பங்குபெற டெஸ்லா, Amperex உடன் சீனாவின் மற்றொரு நிறுவனமான BYD நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியா
உலகிலேயே அதிகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியில் இந்தியா 3வது இடத்தில் இருக்கும் நிலையில், இது நாட்டின் பொருளாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் நிலையில் பேட்டரி வாகனங்களுக்கு முக்கியதுவம் கொடுக்க முடிவு செய்துள்ளது இந்தியா.
இதனுடன் இத்துறை வர்த்தகத்தைக் குறைந்தபட்சமாவது இந்தியா பெற வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடன் மாபெரும் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவில் உருவாக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
ஆலோசனை
இத்திட்டத்தின் முதல்கட்டமாக இந்தியாவில் 10 லட்சம் வீடுகள் மற்றும் 30000 பேட்டரி கார்களுக்கு மின்சாரம் கொடுக்கும் வகையில் 1000 மெகாவாட் தளத்தை உருவாக்க முதற்கட்ட ஆலோசனை முடிந்துள்ளது.
இதற்காகன டென்டர் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.
டெஸ்லா
அமெரிக்க நிறுவனமான டெஸ்லா ஆசிய சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்ட நிலையில், கார் உற்பத்தி தொழிற்சாலையில் இந்தியாவில் அமைக்க ஆலோசனை செய்த நிலையில் கடைசிக்கட்டத்தில் சீனாவில் கூட்டணி அமைத்து உற்பத்தியை துவங்கியது.
தற்போது பேட்டரி மற்றும் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.