பெங்களூரு: ஆசியாவின் மிகப் பெரிய புகையிலை உற்பத்தியாளரான ஐடிசி நிறுவனம் காபி டே நிறுவனத்தின் ஒரு கணிசமான பங்குகளை வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஐடிசி நிறுவனம் தன்னை ஒரு புகையிலைப் பொருட்கள் சார்ந்த நிறுவனம் என்பதில் இருந்து, தன்னை ஒரு பன்முகத் தன்மை கொண்ட நிறுவனமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் காபி டேவில் பங்குகளை வாங்க இருப்பதாகச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

ஏற்கனவே காபி டே நிறுவனத்தின் நிதி நிலை விவரங்கள் எல்லாம் ஐடிசி நிறுவனத்திடம் சரி பார்ப்பு நடவடிக்கைகளுக்காக கொடுத்திருப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
ஆக ஐடிசி நிறுவனம் காபி டே நிறுவனத்தின் பங்குகளை வாங்க உலகின் மிகப் பெரிய குளிர்பான நிறுவனமான கோக கோலா உடன் போட்டி போட வேண்டி இருக்கும் என்கிறார்கள். கோக கோலா நிறுவனமும் காபி டே நிறுவனத்தில் ஒரு கணிசமான பங்குகளை வாங்க மதிப்பீடுகளை எல்லாம் செய்ததாம். ஆனால் அதன் பிறகு கோக கோலா தரப்பில் இருந்து காபி டே நிறுவனத்துக்கு யாரும் பேசவில்லையாம்.
ஒருவேளை காபி டே நிறுவனத்தில் ஐடிசி நிறுவனம் பங்குகளை வாங்கினால் ஐடிசி நிறுவனம் மேலும் பன்முகத் தன்மை கொண்ட நிறுவனமாக மாறும். ஏற்கனவே இந்திய அரசு புகையிலைப் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதித்துக் கொண்டு இருக்கிறது. அதோடு பொது இடங்களில் புகை பிடிப்பதையும் பெரிய அளவில் தடை செய்து வருகிறது.
கடன் பிரச்னைகளைத் தாங்க முடியாமல், வி ஜி சித்தார்த்தா இறந்த பிறகு, காபி டே நிறுவனம் தன் கடன்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அழுத்தத்தில் இருக்கிறது. காபி டே நிறுவனத்தில் இருந்து, தங்கள் பங்குகளை வாங்க ஐடிசி நிறுவனத்திடம் பேசினார்களாம். ஐடிசி தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை என மற்றொரு தப்பினர்கள் சொல்கிறார்களாம்.
காபி டே நிறுவனத்துக்கு சுமாராக 1,700 கடைகள் இந்தியாவில் இருக்கிறதாம். ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்தியாவில் வைத்திருக்கும் கடைகளை விட சுமாராக 10 மடங்கு அதிக கடைகளை காபி டே இந்தியாவில் வைத்திருக்கிறதாம்.
காபி டே நிறுவனத்தில் தற்போது கேகேஆர் & கோ 6.07% பங்குகளையும், ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் 5.7% பங்குகளையும், இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலக்கனி 2.69% பங்குகளையும் வைத்திருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications