மும்பை: இந்தியாவில் வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய ரிசர்வ் வங்கிக்குத் தான் இருக்கிறது. ஆர்பிஐ சொல்லும் விதிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டியது இந்தியாவில் செயல்படும் வங்கிகளின் கடமை.
அந்த கடமையில் இருந்து மீறும் வங்கிகள் மீது பல சமயங்களில் ஆர்பிஐ கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதை அவ்வப்போது செய்திகளில் பார்க்க முடிகிறது. குறிப்பாக விதிமுறை மீறல்களுக்குக் கோடிக் கணக்கில் விதிக்கப்படும் அபராதங்கள்.
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 2019 தொடங்கி ஜூலை 2019 வரையான ஏழு மாதங்களில் 70 முறை பல வங்கிகளுக்கு அபராதம் விதித்து இருக்கிறதாம். இப்படி அதிரடியாக 70 முறை விதித்த அபராதங்களின் மொத்த தொகை 122.9 கோடி ரூபாய் என்று சொல்லி இருக்கிறார் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எம் கே ஜெயின். அதோடு இந்தியாவில், வங்கிகள், ஆர்பிஐ சட்ட திட்டங்களை மதித்து நடக்கும் கலாச்சாரம் திருப்திகரமாக இல்லை எனவும் சொல்லி இருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டம் FIBAC என்கிற பெயரில் நடந்தது. இந்த கூட்டத்தை இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு (Ficci) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இணைந்து நிர்வகித்து நடத்தியது. அந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எம் கே ஜெயின் "ஆர்பிஐ விதிமுறைகளை வங்கிகள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். அப்படி ஆர்பிஐ சட்டங்களை மதித்து நடப்பதை நாங்கள் பாராட்டுகிறோம்" எனவும் சொல்லி இருக்கிறார்.
"ஆர்பிஐ விதிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்களை மதிக்கும் கலாச்சாரம் இருந்தால் வங்கிகள் பல வழிகளில் நன்மை அடைவார்கள். வங்கிகளுக்கு இருக்கும் அமைப்பு ரீதியான மற்றும் தனி நபர் ரீதியிலான ரிஸ்குகள் பெரிய அளவில் குறையும், வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும், எனவே நல்ல முடிவுகளை எடுக்க முடியும். மிக குறிப்பாக நெறிமுறையாளர்களோடு நட்புறவு மேம்படும்" எனச் சொல்லி இருக்கிறார் ஜெயின்.
எனவே வங்கிகள் நெறிமுறையாளர்கள் சொல்லும் விதிமுறைகளைப் பின்பற்ற கொஞ்சம் சீரியஸாக முயற்சிக்க வேண்டும். இந்திய வங்கிகளில் நடந்த பல வங்கி மோசடிகளால் வங்கி பெரிய நட்டங்களைச் சந்தித்து இருக்கிறது. இந்த நட்டங்களை எல்லாம் நெறிமுறையாளர்களின் சட்ட திட்டங்களை மதித்து நடந்திருந்தால் தவிர்த்து இருக்கலாம் எனவும் சொல்லி இருக்கிறார்.