எந்த துறை எடுத்தாலும் மந்தம், வீழ்ச்சி, வேலையிழப்பு என பல செய்திகள் வெளியாகி வருகின்றன. அதிலும் ஆட்டோமொபைல் துறையில் பல லட்சம் பேர் வேலையை இழந்துள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் இதற்கு அடுத்தாற்போல் உணவு சார்ந்த நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களிலும் இதன் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதற்கெல்லாம் எதிராகவும் சில அறிக்கைகள் வெளியாகியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு, மிகப் பிரபலமான இந்தியாவின் பிஸ்கட் உற்பத்தியாளாரான பார்லே நிறுவனம், இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலை மீண்டும் தொடர்ந்தால், இந்த நிறுவனத்தில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிஸ்கட் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான பிரிட்டானியா நிறுவனமும், இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தத்தால், மக்கள் நாளுக்கு நாள், ஒரு 5 ரூபாய் மதிப்புள்ள பிஸ்கட் வாங்க கூட யோசிக்கிறார்கள் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் கடந்த ஆக்ஸ்ட் 20 ம் தேதியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. இதனால் தேவை தற்போதைக்கு குறைந்திருக்கலாம். ஆனால் அது நாம் நினைக்கும் அளவுக்கு மிக மோசமாக இல்லை, அது வளர்ச்சி கண்டு வருகிறது என்றும் கூறியுள்ளது.
இதே எடெல்வைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார மந்தம் நிலவி வரும் தற்போதைய நிலையில், நுகர்வில் மாற்றம் இல்லை. அதிகளவில் வளர்ச்சி இல்லை என்றும் கூறியுள்ளது.
மேலும் நுகர்வோர் நிறுவனங்களின் கூற்றுப்படி, நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி குறைந்துவிட்டாலும், வளர்ச்சி நன்றாகத் தான் இருக்கிறது. உதாரணத்திற்கு ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் 17 சதவிகித வாளர்ச்சி கண்டுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில நுகர்வோர் பொருட்களின் வளர்ச்சியானது மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது நன்றாகத் தான் உள்ளது. குறிப்பாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் வளர்ச்சி 5 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த ,மார்ச் காலாண்டில் 7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது இது மிதமான வளர்ச்சியாகும்.
இது தவிர மாரிக்கோ லிமிடெட், கோத்ரேஜ் கன்ஷூயூமர், டாபர் இந்தியா, ஐ.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களின் வளர்ச்சி 6%, 5% மற்றும் 9.6%, 3% சதவிகித வளர்ச்சியையும் இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆக நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டுகளில், இந்த நுகர்வோர் பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பருவமழையின் காரணமாக மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும், இதனால் தேவை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.