டெல்லி : மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து தடை செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 2 முதல் கட்டாயம் ரயில் நிலையங்களில், ஒருமுறை உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும். மேலும் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும், இந்த நடைமுறை வரும் அக்டோபர் 2ம் தேதி முதல், கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
இது முன்னதாக பாராளுமன்ற செயலகத்தில் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக இங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத சணல், துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாட்டர் பாட்டில் நசுக்கும் இயந்திரங்கள் வைக்கப்படும்
இதன் படி முதல் கட்ட நடவடிக்கையாக, முக்கியமான 360 ரயில் நிலையங்களில் 1,853 பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் நசுக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாகவும், இதற்காக ரயில்வே வாரியம், ஐ.ஆர்.சி.டி.சியிடம், ரயில்களில் பயணிகள் உபயோகப்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை தங்களிடம் திருப்பி தருமாறும் கேட்டுள்ளது. இதன் மூலம் பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டு மீண்டும், மறசுழற்சி செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படும் என்றும் கருதப்படுகிறது.
இந்திய ரயில்வே “கழிவு ஜெனரேட்டர்”
ரயில்வே உயர் அதிகாரிகளிடமும், ரயில்வே ஊழியர்களிடமும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும், மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தவும், அதையுமே முடிந்த அளவு குறைந்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே ஒரு "கழிவு ஜெனரேட்டர்" என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதனால் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றபட வேண்டும் என்றும், ரயில்வே வாரிய தொடர்பு தெரிவித்துள்ளது. அதோடு பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவதை, குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள்
இந்த நிலையில் சுதந்திர தின விழா அன்று, பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், ஒருமுறை மட்டும் உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் ஒருமுறை மட்டும் உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை கைவிட முடியுமா? ஆனால் அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், இது குறித்து இதை செயல்படுத்த பல அணிகள் திரட்டபடலாம் என்றும், அக்டோபர் 2ம் தேதி, இது குறித்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது நினைவு கூறதக்கது.