மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒரு புறம் தொடர் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட முக்கிய துறைகள் வீழ்ச்சி, இதனால் ஜி.டி.பி குறித்தான கவலை என பல பிரச்சனைகள் இருந்தாலும், இதன் மொத்த தாக்கமும், இந்திய ரூபாயின் மதிப்பில் தான் எதிரொலிக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தம் ஒரு பக்கம், காஷ்மீர் பிரச்சனையால் நீளும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை, என திரும்பிய பக்கமெல்லாம் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டு இருக்கிறது.
இதனால் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தைகளும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இதனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.
ரூபாய் இன்னும் 4% வரை வீழ்ச்சியடையலாம்
இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் 4 சதவிகிதம் வீழ்ச்சி காணும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 31 முதலே, இந்தியா ரூபாய் மதிப்பு மிக கடுமையான வீழ்ச்சி கண்டு கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் அமெரிக்க அன்னிய செலவாணி அதிகரித்திருந்தாலும், (ஆகஸ்ட் 9வுடன் முடிவடைந்த வாரத்தில் 430 பில்லியன் டாலர் ஆக அன்னிய செலவாணி இருப்பு அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் 411.90 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது ) அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை அறிவித்தது நினைவு கூறத்தக்கது.
வர்த்தக போரால் வீழ்ச்சி கண்ட கரன்சிகள்
இந்த வட்டி விகித குறைப்பு என்பது பணவீக்கம் குறைவாக இருந்தபோதும், அமெரிக்கா பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ளவும், இது பொருளாதாரத்தை வலுபடுத்த எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும் கூறப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாணய மதிப்புகள் சரிவையே சந்தித்துள்ள நிலையில், இதில் இந்தியா மட்டும் விதி விலக்கு அல்ல. இதற்கு முக்கிய காரணம் இரு பெரும் முக்கிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீனாவுக்கும் இடையே நடைபெறும் வர்த்தக போரால், டாலரின் மதிப்பில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் யென் மதிப்பு மட்டும் அதிகரிப்பு
மேலும் குறிப்பிட்ட 17 நாணயங்களில், 16 நாணயங்கள் மதிப்பு வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. அதே நேரத்தில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 19 வரையிலான காலத்தில் ஜப்பானின் யென் மதிப்பு மட்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த 17 கரன்சிகளில், 12 கரன்சிகளின் மதிப்பு, இந்திய ரூபாயை விட சிறப்பாகவே செயல்பட்டதாக கூறப்படுகிறது.
பல நாடுகளின் கரன்சி மதிப்பு வீழ்ச்சி
எனினும் பிரேசில், மெக்ஸிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவை ரூபாயை விட அதிக வீழ்ச்சியை கண்ட நாடுகளாகும். இந்த காலகட்டத்தில் மட்டும் ரூபாய் 3.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதும், இதே தென்னாப்பிரிக்காவின் ரேண்ட் கரன்சி 8.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச பொருளாதாரம் மீண்டும் இதே நிலை தொடரும் பட்சத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 3 - 4 சதவிகிதம் வீழ்ச்சியடையலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிகப்படியான அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
இந்தியாவைப் பொறுத்த வரை, அன்னிய முதலீட்டாளர்களுக்கான வரி அதிகம் உள்ளது என்ற கருத்தே நிலவி வருகிறது. இது குறித்தான வரி குறைப்பு கடந்த பட்ஜெட்டிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரை, இந்த வரி குறைப்பு பற்றிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் அன்னிய முதலீட்டாளர்களிடையே இது கவலையினையே ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிகளவிலான முதலீடுகள் வெளியேற இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் ஆகஸ்ட் மாதத்தில் ஈக்விட்டியில் இருந்து அதிக முதலீடுகள் வெளியேறினாலும், கடன் பத்திரங்களில் முதலீடுகள் கொஞ்சம் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
இந்தியாவின் வளர்ச்சி குறையும்
மேலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதையடுத்து, இதை மீண்டெடுக்கும் விதமாக, இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்து, 5.4 சதவிகிதமாக குறைத்தது. இது மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க பெரிதும் உதவும் என்றும் நம்பப்படுகிறது. எனினும் நடப்பு நிதியாண்டில் மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரம், ரூபாய் வீழ்ச்சி, பல துறைகளின் வளர்ச்சி சரிவு உள்ளிட்ட பல காரணங்களால், வளர்ச்சி குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இது இந்திய ரிசர்வ் வங்கியும் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவிகிதத்திலிருந்து, 6.9 சதவிகிதமாக குறையும் என்றும் மதிப்பிட்டிருந்தது கவனிக்கதக்கது.
மேலும் இந்த ஆண்டில் ஏற்றுமதியும் நிச்சயமற்றதாகவே உள்ளது. எனினும் பலவீனமான ரூபாயின் மதிப்பும், இதற்கு சிறிது துணை புரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.