செவ்வாய்க்கிழமை முதல் தலைப்புச் செய்தியாக ப.சிதம்பரம் தான் இருக்கிறார். 2ஜி ஊழல் வழக்கிலிருந்து தனது கரையைத் துடைத்த காங்கிரஸ் கட்சி மீது திரும்பவும் ஒரு ஊழல் வழக்கு கரை படிந்துள்ளது.
ப.சிதம்பரம் அப்படி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அப்படி என்ன செய்தார்..?
ஐஎன்எக்ஸ் மீடியா
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து சுமார் 307 கோடி ரூபாய் அளவிலான அன்னிய முதலீடு பெற வெளிநாட்டு முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது. இதை முறைகேடான வகையில் செய்துள்ளதாக நிதி புலனாய்வு பிரிவு கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரத்திற்குத் தொடர்பு உள்ளது எனச் சிபிஐ மற்றும் அமல்லாக்க துறை தெரிவித்துள்ளது.
நிதி புலனாய்வு பிரிவு
ஜனவரி 2008இல் நிதியமைச்சகத்தின் முக்கியப் பிரிவான நிதி புலனாய்வு பிரிவு பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி தலைமை வகிக்கும் ஐஎன்எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 3 மொரிஷியஸ் நிறுவனங்கள் முதலீடு செய்த 305 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டில் முறைகேடு உள்ளதாக அறிவித்தது.
இதன் பின் வருமான வரித்துறை இந்த வழக்கை அமலாக்கத் துறைக்கு மாற்றியது, 2010இல் ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்தின் பெயரில் அன்னிய முதலீட்டு முறைகேடு செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்தது.
கார்த்திக் சிதம்பரம்
6 வருடத்திற்குப் பின் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் தொடர்புள்ள ஒரு நிறுவனத்தில் அமலாக்க துறை ஆய்வு செய்த போது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கும் கார்த்திக் அவர்களுக்குத் தொடர்புடையதாக ஆவணங்கள் சிக்கியது. இதுமட்டும் அல்லாமல் அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட காலத்தில் கார்த்திக்-க்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திலிருந்து இவரது கணக்கிற்குப் பணம் கைமாறியுள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
இதன் பின் சிபிஐ பிரிவு மே 15, 2017இல் முறையற்ற அன்னிய முதலீடு ஒப்புதல் என்றும், 2018இல் பணச் சலவை வழக்கையும் இவர் மீது பதிவு செய்தது.
இந்திராணி, பீட்டர், கார்த்திக்
இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோர் இணைந்து 2007இல் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தைத் துவங்கினர். ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருக்கும் போது இந்நிறுவனத்திற்குத் தகுந்த தகுதிகள் இல்லாதபட்சத்தில் முறையற்ற வகையில் அன்னிய முதலீடு பெற கார்த்திச் சிதம்பரம் மூலம் உதவி பெற்றதாக மூவரின் பேரிலும் வழக்கு இருந்தது. தற்போது இந்த ஊழல் குறித்த விசாரணையில் ப.சிதம்பரமும் இழுக்கப்பட்டு உள்ளார்.
1 மில்லியன் டாலர் டீல்
மார்ச் 2018இல் இந்திராணி சிபிஐ விசாரணையில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முதலீடு பெறுவதற்காக எங்களுக்கும், கார்த்திச் சிதம்பரத்திற்கு இடையில் 1 மில்லியன் டாலர் டீல் இருந்தது எனக் கூறியுள்ளார். இதற்காகச் சிபிஐ அதிகாரிகள் 2018இல் கார்த்திச் சிதம்பரத்தை கைதும் செய்தனர்.
சொத்து கையகப்படுத்துதல்
இதன் பின் ஜூலை 2019 விசாரணையில் குற்றச்சாட்டுகளை இந்திராணி முகர்ஜி முழுமையாக ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திச் சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும், முகர்ஜி ஜோடியின் மொத்த சொத்தையும் அமலாக்க துறையில் கையகப்படுத்தியுள்ளது.
ப.சிதம்பரம்
டிசம்பர் 2018, ஜனவரி 2019இல் இந்த வழக்கு குறித்து ப.சிதம்பரம் இருமுறை விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது பெரும் போராட்டத்திற்குப் பின் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய மத்திய அரசு தீவிரமாக முயன்றது. இதற்காகச் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் மிகத் தீவிரமாகக் களமிறங்கினர். இரண்டு நாட்களாக ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் தேடி வந்த நிலையில் அவர் எங்கே இருக்கிறார் என்பது புதன்கிழமை மாலை வரை ரகசியமாக இருந்தது. இதையடுத்து திடீர் திருப்பமாக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சுவர் ஏறிகுதித்த 20 அதிகாரிகள்
சந்திப்பிற்குப் பின் ப. சிதம்பரம் தன்னுடைய டெல்லி வீட்டிற்குச் சென்றார். ப. சிதம்பரத்தை பின் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விரைந்து வந்தனர். ஆனால் ப. சிதம்பரம் வீட்டின் கதவை திறக்கவில்லை. இதனால் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதன் பின் வீட்டின் சுவர் ஏறி குதித்து 20 அதிகாரிகள் உள்ளே அவரைக் கைது செய்துள்ளனர்.
அவர் தற்போது விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். முதல்முறை ஐஎன்எக்ஸ் வழக்கில் ப. சிதம்பரம் விசாரணை காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.