டெல்லி : அமெரிக்காவைத் சேர்ந்த ஆன்லைன் ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின், ஃப்யூச்சர் கூப்பன் லிமிடெட் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை வாங்க போவதாக கூறப்படுகிறது.
ஆமாங்க.. கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் கூப்பன் லிமிடெட் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு வாங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த இரு நிறுவனங்களும் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், எனினும் நிதித் தொடர்பான எந்த பரிவர்த்தனை குறித்தும் இந்த ஒப்பந்தங்களில் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அமேசானின் இந்த முதலீடு மூலமாக, இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் மேலும் காலூன்ற தொடங்கி விட்டது என்றும் கூறலாம். ஏற்கனவே பல சில்லறை வியாபாரிகளுடன், சூப்பர் மார்கெட்களுடனும் தொடர்பில் இருக்கும் அமேசான், அதன் எதிர்கால நலனுக்கான தற்போதிலிருந்தே, இந்தியாவில் தனது நிலைப்பாட்டை வலுபடுத்திக் கொள்ள, வலுவாக காலூன்ற தொடங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே குமார் மங்கலம் தலைமையிலான, பிர்லா குழுமத்தின் பங்குகளை கடந்த ஆண்டு செப்டம்பரில் வாங்கியதன் மூலம், சுமார் 600 கடைகளை தற்போது நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகள் மூலம் இன்னும் ஆழமாக வேரூன்றி விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஃப்யூச்சர் குழுமம் சூப்பர் மார்கெட் பிரிவில், பிக் பஜார் மற்றும் பல சில்லறை விற்பனை பிரிவுகள், ஈஸி டே, ஹெரிடேஜ் ஃபிரஸ் பிராண்டுகள் உள்ளிட்ட கடைகளின் மூலம் மொத்தம் 1500 கடைகளையும், இது 400 நகரங்களிலும் வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 13.5 சதவிகிதம் அதிகரித்து, 5,149 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிகர லாபம் 11 சதவிகிதம் அதிகரித்து, 170 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு புறம் முதலீடுகள் அதிகரித்தாலும், இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உள்நாட்டு சில்லறை வர்த்தகம் இதனால் பாதிக்கப்படாமல் இருந்தால் சரியே.