இன்று காலை சென்செக்ஸ் 36,387 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 36,103 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கி 36,701 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 228 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,699 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,829 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 88 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது.
வருமான வரிச் சட்டம் 111A மற்றும் 112A-ன் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை பரிமாற்றம் செய்தால் செலுத்த வேண்டிய நீண்ட கால மற்றும் குறுகிய அகால மூலதன ஆதாய வரிகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகச் சொல்லி இருக்கிறார் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதே போல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரிதும் எதிர்பார்த்த ஏஞ்சல் டேக்ஸ் பற்றியும் சில அறிவிப்புகளைச் சொல்லி இருக்கிறார்.
வருமான வரிச் சட்டம் 56 உட் பிரிவு 2 உட் பிரிவு VII b-ன் படி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திரட்டும் நிதிக்கு ஒரு பெரிய தொகை வரியாகச் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இப்போது நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகள் படி இந்த வருமான வரிச் சட்டம் ஸ்டார்ட் அப் நிறுவனமாக இந்தியாவில் பதிவு செய்து கொண்ட நிறுவனங்களுக்கு பொருந்தாது எனச் சொல்லி ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வயிற்றில் பால் வார்த்து இருக்கிறார்.
அதே போல மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் ஒருவரின் தலைமையில் ஒரு தனி ஸ்டார்ட் அப் செல் அமைக்கப்படும். இந்த செல் வழியாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருமானத் துறை சார்ந்த அனைத்து சந்தேகங்களுக்கும் இவர்களை நாடி தேவையான ஆலோசனைகளைப் பெறலாம் எனவும் சொல்லி இருக்கிறார்.
இந்தியாவில் தற்போது ஸ்டார்ட் அப் கலாச்சாரம் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. மூலதன ஆதாய வரி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரி விலக்குகள் காரணமாக பங்குச் சந்தை கொஞ்சம் மேல் நோக்கி அதிகரிக்கும் என நம்பலாம்.