ஏற்கனவே இந்தியாவில் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஐடி துறைகள் தொடர்ந்து பாதிப்புகளை அடைந்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் என்ன ஆகும் என்பது எல்லோருக்குமே கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் வங்கி துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது ப்ளூம்பெரக் வெளியிட்டுள்ள அறிக்கையைப் பார்க்கும் போது, இன்றைய வர்த்தகச் சூழ்நிலையில் இன்னும் சில வருடங்களுக்குத் தொடர்ந்தால் பல வங்கிகள் திவாலாகும் எனத் தெரிகிறது.
10ல் 7 இந்திய வங்கிகள்
உலகிலேயே படுமோசமாக இயங்கும் வங்கிகளின் பட்டியலை பார்க்கும் போது டாப் 10 வங்கிகளில் 7 வங்கிகள் இந்திய வங்கிகள் என்பது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது.
இந்திய வங்கிகள் தற்போது கடுமையான வராக்கடன் பிரச்சனையைச் சந்தித்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் தற்போது கொடுக்கப்பட்டுள்ள கடனை விரைவில் திரும்பப் பெறும் அளவிற்கு எந்தச் சாத்தியக்கூறும் இல்லாத அளவிற்கு நாட்டின் வர்த்தக வளர்ச்சி உள்ளது. இதனால் இந்திய வங்கிகளின் எதிர்காலம் கவலைக்கிடமாக உள்ளது.
இந்திய பொருளாதாரம்
பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தால் வங்கிகளின் சொத்து மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மட்டும் அல்லாமல் புதிய நிதி திரட்டும் முயற்சிகளும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கை
தற்போது ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் மோசமான நிலையில் இருக்கும் டாப் 10 வங்கிகள் பட்டியலில் இருக்கும் 7 வங்கிகளின் பட்டியல் இதோ.
யெஸ் வங்கி
ஐடிபிஐ வங்கி
சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா
பாங்க் ஆஃப் இந்தியா
ஆர்பிஎல் பாங்க் லிமிடெட்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கார்ப்ரேஷன் பாங்க்
ஓரியென்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ்
யெஸ் வங்கி
இதில் யெஸ் வங்கி பங்குகள் மட்டும் இந்த வருடம் சுமார் 70 சதவீத சரிவைச் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் யெஸ் வங்கி தனது கடுமையான முயற்சியின் மூலம் பங்குகளை விற்பனை செய்து 273 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
ஐடிபிஐ வங்கி
இதேபோல் ஐடிபிஐ வங்கி பங்குகள் சுமார் 60 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கடந்த 7 நிதியாண்டுகளாக இவ்வங்கியின் வராக்கடன் அளவு தொடர்ந்து உயர்ந்துகொண்டு இருந்தது தான்.