அருண் ஜெட்லி என்றால் நமக்கு எல்லாம் என்ன நினைவுக்கு வரும்...! மக்கள் செல்வாக்கு அதிகம் இல்லாமல் ராஜ்யசபா வழியாக மத்திய அரசில் பல்வேறு பதவிகளை வகித்தவர்... முன்னாள் நிதி அமைச்சர்... பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, திவால் சட்டம் போன்றவைகளைக் கொண்டு வந்தவர் அவ்வளவு தானே...!
ஆனால் உண்மையில் இது எல்லாம் அருண் ஜெட்லி என்கிற மாபெரும் அரசியல்வாதி, வழக்கறிஞர், அபார நினைவாற்றல் கொண்ட எதிர்கட்சித் தலைவர் என்கிற பிம்பத்தின் ஒரு சிறு பகுதி தான் என்றால் நம்புவீர்களா..?
ஆம், நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும். அவருடைய திறமைகள் கட்சிக்கு அவர் செய்த பணிகள் இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசில் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா ஆகியோர்களுக்கு எல்லாம் எவ்வளவு உதவி இருக்கிறார் என்று தெரியுமா..? வாருங்கள் பார்ப்போம்.
கட்சிப் பணி
பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருக்கும் அருண்ஜெட்லி, அமித் ஷாவுக்கு நிகராக திட்டமிட்டு கட்சியை வளர்த்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்கும் தெரியும்..? தெரியாது என்றால் வாருங்கள் பார்ப்போம். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் 1952 ஆம் ஆண்டு பிறந்த அருண் ஜெட்லியின் அப்பா வழக்கறிஞர், அம்மா வீட்டைப் பார்த்துக் கொள்பவர் டெல்லி சேவியர்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பு, இந்தியாவின் புகழ்பெற்ற வணிகக் கல்லூரிகளளில் ஒன்றான ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸ்-ல் பிகாம் ஹானர்ஸ், அதன்பின் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் என பெரிய படிப்பாளி.
கல்லூரி காலம்
கல்லூரி காலங்களிலேயே பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவில் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் பங்கு எடுத்து படிப் படியாக குறிப்பிடும் படியான ரசியல் தலைவர் ஆகிறார். இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்து சிறை செல்கிறார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, சிறையில் 19 மாதங்கள் சிறையில் கழிக்கிறார் இளைஞர் அருண் ஜெட்லி. இந்த சிறை வாசத்தில் இருந்தே அருண் ஜெட்லியின் அரசியல் வாழ்கை கிரா ஏற்றம் காணத் தொடங்கிவிட்டது.
அரசியல் வளர்ச்சி
சிறைவாசம் முடித்து வெளியே வந்து பாஜகவின் ஜன் மோர்ச்சாவில் இணைகிறார். அதன் பிறகு டெல்லி அகில பாரதிய வித்யா பரிஷத்தின் தலைவர் ஆகிறார். அதன்பிறகு அனைத்து இந்திய அகில் பாரதிய வித்யா பரிஷத் அமைப்பின் செயலாளர் பதவி கிடைக்கிறது. அதன்பின் டெல்லி யூனியன் பிரதேசத்தில் செயலாளர் பதவி. ஆக அரசியலுக்கு வந்து முதல் பத்து வருடங்களுக்கு உள்ளேயே டெல்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு முக்கிய இடம் பிடித்துவிட்டார் அருண் ஜெட்லி.
வழக்கறிஞர்
இந்திய அரசியலில் ஒரு பயணத்தை ஒரு பக்கம் நிதானமாக பயணித்துக் கொண்டிருக்கும் போதே மற்றொரு பக்கத்தில் வழக்கறிஞராக தன் பணியை தொடர்ந்து கொண்டு இருந்தார். இந்தியாவின் பல மாநில உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 1987-ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னும் தன் வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
1990-ஆம் ஆண்டு நம் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் வயதிலேயே கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் போன்ற பெரிய பதவிகளில் அமர்ந்த வழக்கறிஞர்களில் இவரும ஒருவர். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவி கிடைத்த உடனேயே ஒரு பெரிய வழக்ககும் கிடைத்தது அது தான் போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு. இந்த வழக்கிற்கு தேவையான ஏகப்பட்ட ஆவணங்களை அருண் ஜெட்லியே தயார் செய்தார்.
தனியார் நிறுவனங்கள்
ஒருபக்கம் அரசு வழக்கறிஞராக பல்வேறு பதவியில் வகித்தாலும் மறுபக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் தீவிரமாக பணியாற்றி இருக்கிறார். இந்தியாவில் பெப்சிகோ மற்றும் கோக கோலா நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கில் பெப்ஸிகோ நிறுவனம் சார்பாக ஆஜராகி வாதாடி வருகிறார். 2002-ம் ஆண்டு பெப்சிகோ நிறுவனம் சார்பாக இமய மலைப் பகுதியில் இருக்கும் மணாலியில் விளம்பர ஓவியம் வரைந்த வழக்கில் ஆஜராகி வாதாடினார். 2004-ம் ஆண்டு கோக கோலா நிறுவனம் சார்பாக ராஜஸ்தான் உயர் நீதி மன்றத்தில் ஆஜர் ஆகி வாதாடினார்.
டெல்லி துணை நிலை ஆளுநர்
1980 கால கட்டங்களில் டெல்லி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் ஜக் மோகன் அவர்களின் உத்தரவுப் படி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குச் சொந்தமான கட்டிடங்களை உடைக்கும் ஆணையை எதிர்த்து நம் அருண் ஜெட்லி நீதி மன்றங்களில் வாதாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர்கள் ஆன ராம்நாத் கோயங்கா அருண் ஷோரி போன்றவர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பரானார்.
ராஜ்ய சபா எதிர்கட்சித் தலைவர்
1999ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே அமைச்சரவைகளில் இடம் பிடித்துவிட்டார் அருண் ஜெட்லி. 2000 ஆண்டு வாக்கில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், கார்ப்பரேட் விவகாரங்கள் துறை என பல்வேறு முக்கிய அமைச்சகங்களில் அமைச்சராக பதவி வகித்துவிட்டார். 2004 முதல் 2014 வரை மீண்டும் கட்சி பணிகளுக்கு திரும்பினார் 2009 ஆம் ஆண்டு லால் கிருஷ்ண அத்வானி ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய சட்டத்தின் 84 ஆவது அமெண்ட்மெண்டை கொண்டு வந்தவர்களில் அருண் ஜெட்லியும். இந்த 84வது அமெண்ட்மெண்ட் சாராம்சம் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாற்றாமல் இருப்பது தான்.
நிதி அமைச்சர்
அருண் ஜெட்லிக்கு, 2014ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின் நிதி அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. அருண் ஜெட்லியுடன் அருண் ஷோரி மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர்களும் நிதி அமைச்சர் பதவிக்கு போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள் அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சராக்கி அழகு பார்ப்பதற்கான காரணம் என்ன..?
இது தான் காரணம்
கடந்த ஆட்சி காலத்தில் அருண் ஜெட்லி நிதி அமைச்சகம், கார்ப்பரேட் விவகாரத் துறை, பாதுகாப்புத் துறை என பல்வேறு முக்கிய அமைச்சகப் பதவிகளை வகித்தார். அதற்கு முதல் முக்கிய காரணம் நரேந்திர மோடி. இரண்டாவது காரணம் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சினைகளுக்கு எப்போதும் தீர்வு சொல்லும் 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் தான் என்கிறார்கள் பாஜக வட்டத்தினர்கள்.
ஏன் மோடி ஆதரவு
2002 குஜராத் கலவர காலங்களில் இன்று இந்திய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி மற்றும் இந்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவுக்கும் பக்கபலமாக இருந்து சட்ட ரீதியாக உதவியவர் அருண் ஜெட்லி. உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு காலத்தில் வாரம் இரண்டு முறையாவது ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் அளவுக்கு இருவரும் நல்ல நண்பர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பிரதமர் நரேந்திர மோடி வாயாலேயே விலைமதிப்பற்ற வைரம் என்று கொஞ்சும் அளவுக்கு மோடிக்கு நண்பர். அது போக குஜராத்தில் கேசுபாய் பட்டேல் அவர்களை பதவியில் இருந்து இறக்கி, நரேந்திர மோடியை முதலமைச்சர் ஆக்குவதற்கு உறுதுணையாக இறந்தவர்களில் நம் அருண் ஜெட்லியும் ஒருவர் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். இது போதாதா..?
சீனியர்களுக்கு உதவி
2014 ஆட்சி காலத்தில் மோடியின் அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங், நிதின் கட்கரி போன்ற சினியர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க ஒரு முக்கியமான காரண கர்த்தா அருண் ஜெட்லி. ஜெட்லி 2014 - 19 காலங்களில் பாஜக கட்சியின் சாதனைகளை பட்டியல் இடுவதும் பாஜகவின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை ஆதரித்து வாதிடுவதும் இவர் முக்கிய வேலைகளில் ஒன்றாக இருந்தது.
உதவிகள்
2014 - 2019 ஆட்சிக் காலத்தில் கடுமையாக பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் விலை ஏறிய போது என் விலை ஏறியது என எளிய மக்களுக்கும் புரியும் விதத்தில் பேசி பாராட்டுகளை பெற்றவர். கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த ஜிஎஸ்டி நடைமுறைப் படுத்தியவர். இதையெல்லாம் விட முக்கியமாக நவம்பர் 8 2016 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் நிதி அமைச்சராக இருந்து மோடிக்கு வழிகாட்டியவர் நம் அருண் ஜெட்லி.
5 முறை பட்ஜெட்
மோடி தலைமையிலான முதல் ஆட்சிக் காலத்திலேயே உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்கள் சிகிச்சை பெற்றார் அதன் பின்னும் உடல் நலக் குறைவு தொடர்ந்ததால் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இந்தியாவில் தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமைக்குரிய சிலரில் நம் அருண் ஜெட்லியும் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.
உடல் நலம்
கடந்த பிப்ரவரி 01, 2019 அன்று பியுஸ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்டும் நம் அருண் ஜெட்லி தாக்கல் செய்ய வேண்டிய பட்ஜெட் தான். ஆனால் உடல் நலக் குறைவு காரணமாக இவரால் தாக்கல் செய்ய முடியாமல் போனது. இத்தனை அரசியல் வேலைகள் மற்றும் வழக்கறிஞர் பணியில் இருக்கும் போதிலும் விலை உயர்ந்த பேனாக்கள் கைக் கடிகாரங்கள் மற்றும் சொகுசு கார்களை சேகரித்து வைக்கும் பழக்கம் உடையவர் அருண் ஜெட்லி என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சர்
கடந்த 2014-ம் ஆண்டு தான் அருண் ஜெட்லி தன் வாழ் நாளில் முதல் முறையாக தேர்தல் களத்தில் நின்றார் 2014-ம் ஆண்டு அம்ரித்ஸர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நின்றார். எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார் இருப்பினும் ராஜ்ய சபா வழியாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்து நிதி அமைச்சர் பதவியில் அமர்ந்தார் நம் அருண் ஜெட்லி.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல பொருளாதார நடவடிக்கைகளை எடுத்த அருண் ஜெட்லி, இந்த முறையும் நிதி அமைச்சராக பதவி வகித்திருந்தால், தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையை சரியாகப் புரிந்து கொண்டு சரியான திருத்தங்களைச் செய்திருப்பாரோ எனத் தோன்றுகிறது. இந்தியப் பொருளாதாரம் இனி என்ன ஆகும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.