மத்திய அரசின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களுக்கு நான்காம் தலைமுறை அலைக் கற்றைகளை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறதாம். அதோடு இந்த நான்காம் தலைமுறை அலைக் கற்றை ஒதுக்கீட்டை மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதாகவே பார்க்கிறதாம்.
ஏற்கனவே இந்த இரண்டு அரசு நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் நிதி நெருக்கடி இருப்பதாக பல்வேறு செய்திகள் வந்து கொண்டடே இருக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் அலுவலகம் நடத்திய கூட்டத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரு புதிய விருப்ப ஓய்வு திட்டத்தை வரையறுக்க இருக்கிறார்களாம். இந்த விருப்ப ஓய்வு திட்டம் ஊழியர்கள் 58 வயது அடைந்த பின் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பேசி இருக்கிறார்களாம்.
அதே நேரத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் மகாநகர் டெலிகாம் லிமிடெட் ஆகிய இரண்டு அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு பதிலாக ஒரு ஸ்பெஷல் பர்பஸ் வெகிகல் நிறுவனம் மூலம் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இருக்கும் நிலங்களை விற்று பணமாக்கப் போகிறார்களாம் அதோடு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன்களையும் இந்த ஸ்பெஷல் பர்ப்பஸ் வெப்கிகல் நிறுவனத்திற்கு மாற்ற போகிறார்களாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் மகாநகர் டெலிகாம் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலங்களை விற்று பணத்தை திரட்டும் வேலைகளை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள், நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதலீடுகள் மற்றும் பொதுச் சொத்து நிர்வாகத்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு கூட்டுக் கமிட்டி மேற்பார்வை செய்யுமாம்.
தற்போது இந்தத் திட்டம் மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பி இருக்கிறார்களாம். சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் மாநகர் டெலிகாம் லிமிடெட் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் பணம் கொடுப்பதால் நிதி அமைச்சகத்தின் சுமை அதிகரிக்கும் என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பிரதமர் அலுவலக கூட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அன்ஷூ பிரகாஷ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பி கே புர்வார் ஆகியவர்கள் கலந்து கொண்டார்களாம்.