நாங்க ஏற்கனவே அடிப்பட்டுட்டோம், அதுனால இனி யாரும் அலுவலகங்களில் அரசியல் பற்றி பேசக் கூடாது, எல்லோரும் அவங்கவுங்க வேலையை பாருங்க என்றும் கூகுள் நிறுவனம் அதிரடியான கருத்துகளை வெளியிட்டுள்ளது.
என்னப்பா? மனிதர்கள் பேச கூட உரிமை இல்லை என்று கூறுகிறீர்களா? பேசுங்கள் ஆனால் அலுவலகத்தில் அல்ல, அலுவலகத்தில் வேலையை மட்டும் பாருங்க.. என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
ஏன் என்ன காரணம், கூகுள் எதற்காக இப்படி ஒரு திடீர் அறிவிப்பை கொண்டு வந்துள்ளது. இது தவிர இன்னும் பல புதிய விதிமுறைகளை ஊழியர்களுக்காக கூகுள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
டிரம்ப் தோற்க வேண்டும் என்ற தவறான தகவல்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும், இணைய தளங்களின் ஜாம்பவான் ஆன, கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது என்றும். அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் டிரம்பின் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது என்ற சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார்.
டிரம்ப் கூகுள் மீது சாடல்
கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் இவ்வாறு கூறிய போது, இந்த கருத்து சற்று பரபரப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அது தவிர டிரம்ப் இதனை சுட்டிக்காட்டி கூகுள் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அது தவிர கூகுள் நிறுவனத்தை நாங்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். எனினும் மறுபுறம் கூகுள் நிறுவனமோ தாங்கள் யாருக்கும் சாதகமாகவும் செயல்படவில்லை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும் ஒருபோதும் செயல்படவில்லை என உறுதியளித்தது.
ஊழியரால் சர்ச்சை
கூகுள் நிறுவனம் தனது முன்னாள் ஊழியரால் ஏற்பட்ட இந்த சர்ச்சை காரணமாக, இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்க பணி நேரத்தில் அரசியல் குறித்தான பேச்சுக்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும், இனி எல்லோருக்கும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியால் செய்தால் போதும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாம்.
பணிக்கு இடையூறு விளைவிக்கும் பேச்சுகள் வேண்டாம்
மேலும் கூகுள் நிறுவனத்தில் சக ஊழியர்களுடன் தகவல்களையும் யோசனைகளையும் பகிர்வது, நல்ல சமூகத்தை உருவாக்க உதவுகிறது. ஆனால் அதே சமயம் அரசியல் குறித்த விவாதம், வேலை நேரத்தை சீர்குலைக்கிறது. அது தவிர பல சர்ச்சைக்குள்ளாகிறது. ஆக கூகுளின் வேலை குறித்தான கொள்கைகளை மட்டும் பேசுங்கள், பணிக்கு இடையூறு விளைவிக்கும் பேச்சுக்களை கண்டிப்பாக ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூகுள் அறிவுறுத்தி உள்ளது.
தவறான கருத்துகளாக சித்தரிக்கப்பட வாய்ப்பு உண்டு
மேலும் கூகுள் ஊழியர்கள் உங்களது பேச்சுவார்த்தைகள் பொதுமத்தியில் தவறான கருத்துகளாக எடுத்துக் கொள்ளக் கூடும், அதேபோல் கூகுள் வணிகம் மற்றும் கூகுள் தயாரிப்புகளின் மீது தவறான கருத்துக்களை பரப்ப கூடும் என்றும், இது நம் மீதான நம்பிக்கையை குறைக்க கூடும். ஆக ஊழியர்கள் இது போன்ற தவறான கருத்துகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாம்.