கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23, 2019) அன்று, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் ஜிடிபி கணிப்பை மேலும் குறைத்து வெளியிட்டு இருக்கிறது மூடீஸ் முதலீட்டாளர்கள் சேவை அமைப்பு.
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டான 2019 - 20-க்கு 6.2 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என மீண்டும் இந்தியா மீது இடியை இறக்கி இருக்கிறது மூடீஸ்.
இதற்கு முன் 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருக்கும், 2020 - 21 நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்துச் சொல்லி இருந்தது.
சரிவு
ஆனால் இப்போது 2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 6.2 சதவிகிதமாகவும், 2020 - 21 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவிகிதமாகவும் இருக்கும் என தன் கணிப்புகளை மீண்டும் திருத்தம் செய்து வெளியிட்டு இருக்கிறது மூடீஸ். இந்த மறு கணிப்புக்கும் பல்வேறு உலக பொருளாதார காரணிகள் மற்றும் உள்ளூர் பொருளாதார காரணிகளை அலசி ஆராய்ந்து இந்த கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது மூடீஸ்.
இந்தியா
புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதில் இருக்கும் சுணக்கம், கிராம புறங்களில் இருக்கும் பொருளாதார அழுத்த நிலை, ஒட்டு மொத்தமாக இந்தியாவில் நிலவும் நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து தேக்க நிலையில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறது மூடீஸ். மூடீஸ் நிறுவனம் இப்படி ஆசியாவின் 16 நாட்டுப் பொருளாதாரங்களுக்கான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை மீண்டும் பரிசீலனை செய்து தன் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேக்கம் காரணம்
இந்தியப் பொருளாதாரம், உலக பொருளாதார காரணிகளின் அழுத்தத்தில் அதிகம் சிக்கவில்லை. அதற்கு மாறாக இந்தியாவிலேயே... புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதில் காட்டும் சுணக்கம், ஒட்டு மொத்த இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருக்கும் கடுமையான நிதி நெருக்கடி, இந்திய கிராம புறங்களில் நிலவும் அழுத்தம் போன்ற காரணங்களால் தொடர்ந்து இந்தியப் பொருளாதாரம் தேக்க நிலையில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறது மூடீஸ்.
உள்ளூர் காரணிகள்
இந்திய பொருளாதாரம், உலக பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படுவதை விட, உள்ளூர் பொருளாதார காரணிகளாலேயே பெரிய சிக்கிலில் சிக்கித் தவித்துக் கொண்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறது மூடீஸ் அமைப்பு. அதோடு இந்தியாவில் பிசினஸ் செய்வதற்கான செண்டிமெண்ட் குறைந்து இருப்பதையும், நிதித் தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படாமல் தேங்கி நிற்பது போன்ற காரணங்களால் தனியார் முதலீடுகள் போதுமான அளவுக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
கடந்த காலம்
மூடீஸ் அமைப்பைப் பொறுத்தவரை, கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.9 சதவிகிதமாகவும், 2018-ம் ஆண்டில் 7.4 சதவிகிதமாகவும் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதே போல் கடந்த 2019 ஜனவரி மார்ச் காலாண்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியாவின் ஜிடிபி 5.8 சதவிகிதமாக சரிந்து இருப்பதையும் அடிக் கோடு போட்டுக் காட்டுகிறார்கள். 2019 ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விவரங்களை வரும் ஆகஸ்ட் 30, 2019 அன்று வெளியிட்டால் பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது எனத் தெரிய வரும்.
சரியும்
பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார சீர் திருத்த அறிவிப்புகள் எந்த அளவுக்கு நாட்டுக்கும், நாட்டு பொருளாதாரத்துக்கும் பயன் கொடுத்திருக்கிறது என்பதை வரும் ஆகஸ்ட் 30, 2019-ல் பார்த்து விடலாம். இதுவரை மூடீஸ் சொன்ன எல்லா விஷயங்களும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரியும் என்றே சொல்வதாக அமைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மூடீஸ் மட்டும் அல்ல, இந்திய வங்கிகளை நிர்வகிக்கும் ஆர்பிஐ கூட இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 0.1% குறைத்துக் கொண்டதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.