ஒரு புறம் பொருளாதார மந்தம், மறுபுறம் தொடர் வீழ்ச்சி கண்டு வரும் ரூபாயின் மதிப்பு என வாட்டி வதைத்து கொண்டிருக்க என்ன காரணம்.
அதிலும் இந்த ஆண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான மதிப்பிழப்பை கண்டுள்ளது ரூபாய். அதிலும் இந்த ஆண்டில் மட்டும் 3.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து கொண்டே தான் இருந்து வருகிறது.
ரூபாய் மதிப்பு
இன்று காலை 71.50 என்ற விலையில் தொடங்கிய ரூபாயின் மதிப்பு, பின்பு 72.245 ரூபாய் வரை சென்று தற்போது, 71.93 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் வகையிலும், அன்னிய முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும், தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையிலும், பல அதிரடி அறிவிப்புகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில், மத்திய நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதன் விளைவு இன்றைய பங்கு சந்தைகளில் காணப்பட்டாலும், ரூபாயின் மதிப்பு அது எடுபடவில்லை என்றே கூறலாம்.
வர்த்தக போர் தான் காரணம்
எனினும் அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் வர்த்தக போர் முற்றி வரும் நிலையில், இந்த இரு நாடுகளும் மாறி மாறி, தங்களுக்குள் வரி விதித்துக் கொள்ளும் நிலையில், உலக நாடுகளில் வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகள் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த நாடுகளின் கரன்சி மதிப்பும் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக ஆசிய சந்தைகள் படு வீழ்ச்சி கண்டும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
குறிப்பாக மிக பாதுகாப்பான பத்திர முதலீடுகளில் கிடைக்கக் கூடிய இலாபம் கூட சரிந்துள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். அதிலும் இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கத்தின் விலை இது வரை இல்லாத அளவுக்கு உச்சம் பெற்று 39,340 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இதுவும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றும் கருதப்படுகிறது.
அதிகளவிலான முதலீடுகள் வெளியேற்றம்
மேலும் கடந்த ஜூலை மாதம் முதல் கொண்டு இந்திய பங்கு சந்தைகள் 8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளன. இதே கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அன்னிய முதலீடுகள் (ஈக்விட்டி பங்குகள் விற்பனை) வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீனாவுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிரச்சனை மோசமடைந்து வருவதால், உலக நாடுகளின் முதலீட்டாளர்கள் தங்களது சொத்துகளின் நன்மை கருதி முதலீட்டை பாதுகாப்பாக வெளியே எடுக்க தொடங்கியுள்ளனர். இதனையே இந்தியா உள்பட பல ஆசிய நாடுகள், தங்களது கரன்சிகளில் இந்த உணர்வை வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.
சீனாவின் கரன்சி படு வீழ்ச்சி
மேலும் அமெரிக்கா - சீனா பிரச்சனையால் அதிகளவு பாதிக்கப்பட்டது சீனாவின் நாணயமான யுவான் கரன்சியே. இது வர்த்தக போரால் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ரூபாயின் மதிப்பு எங்கே போய் முடியும் என்றும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.