மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமலாக்கத் துறை தற்போது கார்த்தி சிதம்பரம் பக்கம் திரும்பி கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கி இருக்கிறது. எதைப் பற்றி..?
கார்த்தி சிதம்பரம் தனக்கு சொந்தமான பங்குகளை விற்று லாபமாகப் பெற்ற 54 கோடி ரூபாய் வருமானத்தைப் பற்றிக் கேட்கத் தொடங்கி இருக்கிறது.
இந்த பணத்தைப் பயன்படுத்தி தான் அமலாக்கத் துறை பறிமுதல் செய்து இருக்கும் பல சொத்துக்களை வாங்கி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.
மகன் வியாபாரம்
ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி, சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது நிதி அமைச்சர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து இருக்கிறார்கள். தங்கள் நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டு வருவது பற்றி பேசச் சென்று இருக்கிறார்கள். அப்போது சிதம்பரம் தன் மகனின் வியாபாரத்தை மனதில் வைத்துக் கொள்ளுமாறு பீட்டர் மற்றும் இந்திராணியிடம் சொல்லி இருக்கிறார் என தன் வாதங்களை முன் வைக்கிறது அமலாக்கத் துறை.
ஒப்புதல் வாக்குமூலம்
பல்வேறு போலி பணப் பரிவர்த்தனைகள் வழியாக, போலி ஆவணங்களைத் தயார் செய்து கார்த்தி சிதம்பரம் நிர்வகிக்கும் ASCPL மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு சுமார் 3 கோடி ரூபாய் பணத்தை பீட்டர் பரிமாற்றம் செய்து இருக்கிறார். இந்த விஷயம் அமலாக்கத் துறையின் விசாரணையின் போது தெளிவாகத் தெரிய வந்து இருக்கிறது. கார்த்தி சிதம்பரத்தின் வழிகாட்டுதலில் தான் இப்படிப் போலி பணப் பரிமாற்றங்கள் செய்தோம் என, ஐ என் எக்ஸ் மீடியா தரப்பினர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.
சிக்கல் ஆரம்பம்
இதே நேரத்தில் தான் சிதம்பரம் ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீடு வருவதற்கு அனுமதி கொடுத்து இருக்கிறார் ப சிதம்பரம். எனவே தான் தீவிரமாக விசாரித்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் அமலாக்கத் துறையினர்கள். ASCPL-ன் துணை நிறுவனங்களுக்கு வந்த பணத்தை மீண்டும் ASCPL நிறுவனத்துக்கே மாற்றப்படுகிறது. இப்போது தான் சிக்கல் தொடங்குகிறது. கார்த்தி சிதம்பரத்தின் கழுத்தை இன்று வரை நெறித்துக் கொண்டு இருக்கிறது.
வாசன் ஹெல்த்கேர்
ASCPL நிறுவனத்துக்கு வந்த பணத்தை வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார். வாசன் ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகள் நல்ல விலை ஏற்றத்தைக் கண்ட பின் சுமார் 41 கோடி ரூபாய் லாபத்தோடு பங்குகளை விற்றுவிடுகிறார். அதே போல மற்ற பங்கு முதலீடுகள் வழியாகவும் சுமார் 13 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறார் நம் கார்த்தி சிதம்பரம். இப்போது அமலாக்கத் துறை கேட்கும் கிடுக்கிப் பிடி கேள்வியே இந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது என்பது தானாம்..!
பறிமுதல்
அமலாக்கத் துறை ASCPL நிறுவனத்தின் பெயரில் டிசிபி வங்கியில் இருக்கும் 90 லட்சம் ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட், டெல்லி ஜோர் பாக் வீட்டில் கார்த்தி சிதம்பரத்தின் பங்கு, கார்த்தி சிதம்பரத்தின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருக்கும் 9.23 கோடி ரூபாய் என பல்வேறு சொத்துக்களை பறிமுதல் செய்து வைத்து இருக்கிறார்கள். அதோடு இங்கிலாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வைத்திருக்கும் பண்ணணை நிலம், டென்னிஸ் கிளப் போன்ற சொத்துக்களையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்து இருக்கிறார்களாம்.