முகேஷ் அம்பானி இந்தப் பெயர் கடந்த 2 வாரக் காலமாகப் போதும் போதும் என்று சொல்லித் தீர்க்கும் வகையில் தலைப்புச் செய்திகளில் வந்து முதலீட்டாளர்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறார் முகேஷ் அம்பானி.
தொடர் அறிவிப்புகளால் முதலீட்டாளர்களைப் படு பசியாக வைத்திருந்த முகேஷ் அம்பானி கடந்த ஒரு மாத காலத்தில் சொத்து மதிப்பு அதிகளவிலான உயர்வை அடைந்துள்ளார்.
ஜியோ, ஆராம்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம், அமேசான் உடன் பேச்சு வார்த்தை எனத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் மூலம் முகேஷ் அம்பானியின் குடும்பச் சொத்து மதிப்புத் தற்போது 50 பில்லியன் டாலர் என்ற மாபெரும் உச்சத்தை அடைந்துள்ளது.
இதன் மூலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பமாக உயர்ந்துள்ளார் முகேஷ் அம்பானி.
ஆசியாவிலேயே பணக்கார 20 குடும்பங்கள் சுமார் 450 பில்லியன் டாலர் வரையிலான சொத்தை கட்டி ஆள்கிறது. இந்த முக்கியமான பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானிக்கும், 2வது இடத்தில் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த Kwokக்கும் சுமார் 12 பில்லியன் டாலர் வித்தியாசம்.
இப்படிச் செல்வச் செழிப்பில் இருக்கும் முகேஷ் அம்பானி திருப்பதி ஏழுமலையானுக்கு 1.11 கோடி ரூபாய் அதாவது நாமத்தை குறிக்கும் வகையில் மூன்று ஒன்று இருப்பது போல் 1.11 கோடி ரூபாய்க்கான டிடி-ஐ திருமலா திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அதிகாரியான ஏவி.தர்மா ரெட்டி-யிடம் ரிலையன்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளது.
இந்தப் பணத்தை TTD அளிக்கும் இலவச அன்னதானம் திட்டத்திற்குப் பயன்படுத்த ரிலையன்ஸ் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தர்மா ரெட்டி தெரிவித்தார்.
இப்படி என்ன இந்த அன்னதான திட்டத்தில் சிறப்பு உள்ளது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் இந்த இலவச அன்னதான திட்டத்தில் தினமும் 1 லட்சம் பேர் மனதார சாப்பிட்டு மகிழ்கின்றனர். இத்திட்டத்திற்கான நிதியை 1985ஆம் ஆண்டுத் தேவஸ்தானம் டெப்பாசிட் செய்த 1000 கோடி ரூபாய் நிதியில் கிடைக்கும் வட்டி வருமானத்தின் மீது இந்த அன்னதானம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.