இந்தியாவின் பொருளாதார மந்த நிலை காரணமாக ரெசசன் கூட வரலாம் என பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் நம்மை வலுவாக எச்சரித்துக் கொண்டு இருக்கின்றன.
மார்கன் ஸ்டான்லி தொடங்கி, ஃபண்ட் மேனேஜர்கள் சர்வே, வணிக அமைச்சர் பியுஷ் கோயல், மூடீஸ் நிறுவனம்... என நம் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்புகள், ரெசசன் வந்தால் என்ன ஆகும் என நம்மை எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் நம் எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னேஷ் குமாரோ நேர் எதிராக ஒன்றும் நடக்கவில்லை என்கிற ரீதியிலேயே கடந்த சனிக்கிழமை பேசி இருக்கிறார்.
ரெசசனா..?
சமீபத்தில் கெளவுஹாத்தியில், வங்கிகளுக்கு புதிய யோசனைகளைக் கொடுக்கும் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகளை பரிசீலிக்கும் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது "இந்தியாவில் ரெசசன் இல்லை" எனச் சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார். "சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன 32 மாற்றங்கள் தரமானவை. வங்கி மற்றும் வரித் துறைகளில் சிரமமான விஷயங்களை சரி செய்வது தான் இந்த மாற்றங்களின் நோக்கம். இந்த மாற்றங்கள் முக்கியமானவை" எனச் சொல்லி இருக்கிறார்.
துறை சார்ந்தவைகள்
மேலும் "மத்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் இணைந்து, இந்திய வங்கிகள் கடன் கொடுக்கும் அளவுக்கு தெம்பாக வைத்திருக்கிறார்கள். அதோடு கடன் கொடுப்பதற்கான சூழலையும் கொண்டு வந்து இருக்கிறார்கள். மேலும் இந்தியாவின் கடன் கொடுப்பதை மேம்படுத்த இன்னும் சில நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் மேற் கொண்டு அறிவிக்கப் போகிறார்களாம். இனி வரக் கூடிய விஷயங்கள் ஒவ்வொரு துறை சார்ந்த விஷயமாக இருக்கும்" எனச் சொல்லி இருக்கிறார் ரஜ்னேஷ் குமார்.
பணம் இருக்கு
"எஸ்பிஐ போன்ற வங்கிகள் கடன் கொடுக்க போதுமான பணத்துடன் தான் இருக்கிறது. ஆக தற்போது இந்தியாவில் தேவையாக இருப்பது கடன் நடவடிக்கைகள் தான். அந்த கடன் நடவடிக்கைகள் தான் நடக்காமல் இருக்கிறது. உதாரணமாக தற்போது பெரும்பாலும் கார் வாங்க வேண்டும் என்கிற ஆசையே இல்லாமல் இருக்கிறது. காரணம் ஓலா, உபர் தான். இவர்களை வெளி ஊர்களுக்கோ, உள்ளூர் பயணங்களுக்கோ, சின்ன ட்ரிப்களோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இவர்களை அழைத்தால் வாடகைக் கார் வந்துவிடும். எனவே கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து இருக்கிறது" என்கிறார் எஸ்பிஐ தலைவர்.
பல விஷயங்கள் ஓகே
"ஒவ்வொரு துறை சார்ந்தவர்கள் கேட்ட மாற்றங்களில் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே கூடிய விரைவில் கடன் நடவடிக்கைகள் அதிகரிக்கும். அதோடு இந்தியாவில் ரெசசன் இல்லை, இது சில துறைகளில் தேவை குறைந்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் தான்" என விளக்கமும் கொடுத்து இருக்கிறார் எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னெஷ் குமார். மேலும் உலக அளவில் ஆட்டோமொபைல் விற்பனை சரிந்து கொண்டே வருகிறது, ஆக இந்தியா மட்டும் எப்படி இதில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மாற்றம் இல்லை
இன்று வரை இந்திய இளைஞர்களின் கனவுகள் ஆசைகள் எதுவும் மாறவில்லை. நம் இந்திய பொருளாதாரத்துக்கு அதிக வளர்ச்சி தேவைப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நாமும் ஒரு பெரிய பங்கு வகிக்கிறோம். எனவே எப்போது எல்லாம் உலக பொருளாதாரத்தில் பிரச்னை வருகிறதோ அப்போது எல்லாம் இந்தியாவும் பாதிப்படையத் தானே செய்யும் எனவும் சொல்லி கொஞ்சம் சமாதானப்படுத்தி இருக்கிறார். அதோடு நல்ல பருவமழை, இந்தியப் பொருளாதாரத்தை சரி செய்யும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
தேவை அதிகரிக்கும்
அரசு கூடுதலாக செலவழிக்க இருப்பது, பண்டிகை கால வியாபாரம் போன்றவைகள் மீண்டும் இந்தியப் பொருளாதாரத்தின் நுகர்வை அதிகரிக்கச் செய்யும் எனச் சொல்லி இருக்கிறார். இந்த 2019-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு, இந்தியப் பொருளாதாரத்துக்கும் சரி, வங்கிகளுக்கும் சரி நல்ல காலமாக அமையும் எனவும் ஆரூடம் சொல்லி இருக்கிறார். இவர் சொல்லும் ஆரூடம் பலித்தால் மகிழ்ச்சி அடையப் போகும் நபர்களில் முதல் இடத்தில் இருப்பது, ஏழை எளிய மாதச் சம்பளதாரர்கள், தினக்கூலி வாங்கும் நம்மைப் போன்ற மக்கள் தான்..! எஸ்பிஐ தலைவர் சொல்வது போலவே நடக்கட்டுமே..!