டெல்லி: லஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களில் சிக்கி இருக்கும் 22 மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறையில் இருந்து மேலும் (Central Board of Indirect Taxes and Customs)22 உயர் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி அதிரடி காட்டி இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம்.
கடந்த ஜூன் 12, 2019 அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Tax) 12 அதிகாரிகள் மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறையின் (Central Board of Indirect Taxes and Customs) 15 அதிகாரிகளை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பினார்கள். பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் அடிப்படை விதி 56 (J) பிரிவின் படி இவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
இந்த பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையின் அடிப்படை விதி 56 (J)-ன் படி அந்த துறை சார்ந்த உயர் அதிகாரிகள், தன் துறையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கட்டாய ஓய்வு வழங்க முடியும். ஆனால் அதற்கு மூன்று மாத காலம் நோட்டீஸ் காலம் அல்லது மூன்று மாத சம்பளம் மற்றும் சலுகைகளைக் கொடுக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டு இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் அரசாக தன்னைக் காட்டிக் கொள்ள இது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு பிசினஸ் பத்திரிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பேட்டியில் இதைப் பற்றிப் பேசி இருக்கிறார். "நம் வருமான வரித் துறை மற்றும் மறைமுக வரித் துறைகளில் சில அதிகாரிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி நேர்மையாக வரி செலுத்துபவரை அவமானப்படுத்துவது அல்லது மிகச் சின்ன தவறுகளுக்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது போன்ற தவறுகளைச் செய்து இருக்கிறார்கள். இது போன்ற அதிகார துஷ்பிரயோகங்களை நாங்கள் பொருத்துக் கொள்ளமாட்டோம். அதற்குத் தான் சமீபத்தில் வரித் துறையில் இருந்து சில தவறான அதிகாரிகளை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறோம்" எனச் சொல்லி இருக்கிறார் பிரதமர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகளை பிரதிபலிக்கும் விதமாக நம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், கடந்த வெள்ளிக்கிழமை (23.08.2019) அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார். இனி நிறுவனங்கள் எந்த ஒரு வரித் துறை அதிகாரிகளாலும் அவமானப்படுத்தப் படமாட்டார்கள். அதோடு கம்பெனிகள் மீது வழக்கு தொடுப்பதில் அரசுக்கு விருப்பம் இல்லை எனவும் சொல்லி இருக்கிறார். அதற்கு பதிலாக வரித் துறை அதிகாரிகளின் முகத்தைக் கூட பார்க்காமல் வரித் துறைக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டு, நோட்டீஸுக்கு பதிலும் அளிக்க ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட சிஸ்டம் கொண்டு வரப்படும் எனச் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.