டெல்லி : இந்திய ரயில்வேக்கு இப்படியும் ஒரு வருமானமா? அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்ற வருமானமானது 31 சதவிகிதம் அதிகரித்து, 1,377 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே அமைச்சகம் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணிகளிடம் அபராத தொகையை வசூலிக்கும். இந்த தொகையானது, கடந்த 2016 - 2019ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016 - 2017ம் ஆண்டு அறிக்கையில், ரயில்வே வருவாய் மிக குறைவாக உள்ளதாகவும், இந்த வருவாய் இழப்பு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பரிசோதனையை அதிகரியுங்கள்
கடந்த 2016 - 2017ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் அதிகளவிலான பயணிகள் பயனித்த நிலையில் தான், அதிகளவிலான நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், டிக்கெட் பரிசோதனையை கெடுபிடியாக்கியது ரயில்வே துறை. ஆமாங்க.. ஒவ்வொரு ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த மூன்று ஆண்டுகளில், பரிசோதகர்கள் மூலம் பரிசோதனை செய்ததில், கிடைக்கப்பட்ட வருவாய் தான் இந்த 1,377 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
எந்த வருடம் எவ்வளவு வசூல்?
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட இந்த தகவல் மூலம், கடந்த 2016 - 2017ம் ஆண்டில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த பயணாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையானது 405.30 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவே 2017 - 2018ம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட தொகையானது 441.62 கோடி ரூபாய் எனவும், இதுவே 2018 - 2019ம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட அபராத தொகையானது 530.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
டிக்கெட் இல்லாமல் அதிகம் பிடிபட்டுள்ளனர்
கடந்த ஏப்ரல் 2018 முதல், ஜனவரி 2019 வரையிலான காலத்தில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பிடிப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.9 மில்லியன் பயணிகளாகும். இது இஸ்ரேல் மக்கள் தொகையை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. என்ன தான் அரசு பல கடினமான நடவடிக்கைகளை எடுத்தாலும், இந்தியாவில் இது போன்ற வசூல் வேட்டை இன்றளவிலும் ரயில்களில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது.
ஓரு பயணிக்கு எவ்வளவு அபராதம்?
ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணியிடம் டிக்கெட் கட்டணத்துடன் குறைந்தபட்சம் 250 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை செலுத்த பயணிகள் மறுத்தாலோ அல்லது அபராதம் செலுத்த பணம் இல்லாவிட்டாலோ, அத்தகைய பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் ரயில்வே சட்டத்தின், 137ஆவது பிரிவின் படி, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அந்த பயணிகளை கோர்டில் ஆஜர்படுத்துவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு 1000 ரூபாய் அபராதமும், 6 மாதம் ஜெயில் தண்டனையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications