டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசூகி. குறிப்பாக இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் சுமாராக 50 சதவிகித கார்கள் மாருதி சுசூகி நிறுவனத்துக்குச் சொந்தமானது தான்.
சமீபத்தில் மாருதி சுசூகி நிறுவனத்திலேயே கார்களின் விற்பனை கடந்த பல மாதங்களில் சுமாராக 30 சதவிகிதத்துக்கு மேல் சரிந்திருப்பதாகச் செய்திகள் வந்தன.
அதனைத் தொடர்ந்து மாருதி சுசூகி நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த ஆயிரக் கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து கொண்டே வருகிறார்கள் எனவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
3000 ஊழியர்கள்
தற்போது மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா இன்று மேலும் 3,000 ஒப்பந்த ஊழியர்களுக்கான ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்படவில்லை எனச் சொல்லி நம் பயத்தை இன்னொரு உச்சத்துக்கு கொண்டு சென்று இருக்கிறார். ஏற்கனவே மாருதி சுசூகி நிறுவனம் தன் கையில் அதிகப்படியாக உற்பத்தி செய்து வைத்திருக்கும் கார்களை என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹைப்ரிட் கார்கள்
வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தியது, கூடுதல் வரிகள் போன்றவைகளால் கார்களின் விலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா, அவர் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாகச் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். அதோடு மாருதி சுசூகி, இனி சி என் ஜி ரக எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் கார்கள் மற்றும் ஹைப்ரிட் ரக கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்.
உற்பத்தி சரிவு
கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ந்து மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை சரிந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே உற்பத்தி செய்து வைத்து இருக்கும் கார்களையே விற்று முடிக்க முடியவில்லை. இந்தியா முழுக்க சுமாராக 300 டீலர்கள் தங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை என கடையை இழுத்து மூடிவிட்டார்கள். இந்த சிக்கல் இப்போது மாருதி சுசூகியில் நேரடியாக உற்பத்தியைக் குறைக்கவும், செலவைக் குறைக்கவும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஒப்பந்தத்தை நீட்டிக்கவிடாமல் செய்து இருக்கிறது.
வழக்கம் தான்
பொதுவாக ஆட்டோமொபைல் துறையில், எப்போதுமே வேலை அதிகமாக இருக்கும் போது, கூடுதலாக ஒப்பந்த ஊழியர்களை வேலைக்கு எடுப்பதும், தேவைகள் குறைந்து, சந்தை சுருங்கும் போது, வேலை குறையும். அந்த சமயங்களில், ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதும் வழக்கம் தான் எனச் சொல்லி கொஞ்சம் சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆட்டோமொபைல் என்கிற ஒரு துறையைச் சார்ந்திருக்கும் பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதையும் முன்பே ஒரு முறை குறிப்பிட்டு சொல்லி இருந்தார்.
சார்ந்த துறைகள்
ஆட்டோமொபைல் என்கிற ஒற்றைத் துறையின் விற்பனை, ஆட்டோமொபைல் சேவை தொடங்கி, வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ், லைசென்ஸ் வழங்குவது, வாகனங்களுக்கான கடன் வியாபாரம், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் வியாபாரம், ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்குகளில் வேலை செய்பவர்கள், போக்குவரத்து துறையில் வேலை செய்பவர்கள் என ஆட்டோமொபைல் விற்பனை சரிவால் இவர்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்லி முன்பே எச்சரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.