உலக அளவில் எப்போதும் விமான நிறுவனங்கள் இப்படி அதிரடி விலையில் பயணக் கட்டணங்களை அறிவித்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது வழக்கம்.
அதே தான் இப்போதும் நடந்து இருக்கிறது நம் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தில். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக களம் இறங்கி இருக்கிறார்கள்.
உள் நாட்டு விமான சேவை முதல் சர்வதேச விமான சேவை வரை பலவற்றுக்கும் அதிரடி விலை குறைப்பில் இறங்கி இருக்கிறார்கள். அது தான் செய்தியே.
டிக்கெட் விலை
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் நம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் உள் நாட்டு விமான சேவையில் 1,299 ரூபாய் முதல் கட்டணத்தைத் தொடங்குகிறார்கள். இந்த 1,299 ரூபாய் என்பது ஜிஎஸ்டி போன்ற அனைத்து வரி மற்றும் இதரக் கட்டணங்களும் சேர்க்கப்பட்டது என்கிறார்கள். அதே போல சர்வதேச வழித் தடங்களுக்கு 3,999 ரூபாயில் இருந்து விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தைத் அறிவித்து இருக்கிறார்கள்.
காலம்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்து இருக்கும் இந்த சலுகை இன்று முதல் தொடங்குகிறதாம். வரும் ஆகஸ்ட் 30, 2019 வரை இந்த சலுகை விலையில் விமான பயணச் சீட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம். ‘தேஷ் விதேஷ் கூமோ' அதாவது உள்நாடு வெளிநாடு சுற்றுங்கள் என்கிற பெயரில் இந்த அதிரடி சலுகைகளை அறிவித்து தங்கள் நிறுவனத்தையும் பிராண்டையும் பிரபலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் நம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தினர்கள்.
எத்தனை இருக்கைகள்
இந்த சலுகையை எந்த வழியில் முன் பதிவு செய்தாலும் பெறலாமாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் என்ன என்று கேட்டால், இந்த புதிய சலுகை விலை விமானப் பயணத்தின் கீழ் எத்தனை இருக்கைகள் கொடுக்கப் போகிறார்கள் என தெளிவாகச் சொல்லவில்லை. கேட்டால், ஒரு குறிப்பிட்ட இருக்கைகள் தான் இருக்கின்றன. முதலில் வருபவர்களுக்கு அந்த சலுகை இருக்கைகள் ஒதுக்கப்படும் எனச் சொல்லி சமாளித்து இருக்கிறார்கள். இதை சில சாமானியர்கள், நடுத்தர மக்கள்... எத்தனை இருக்கைகள் சலுகை விலையில் கிடைக்கும் எனச் சொல்லவில்லை என்றால் எப்படி எனவும் கேள்வி எழுப்புகிறார்கள்.
ரீ ஃபண்ட்
அதோடு ஸ்பைஸ் ஜெட்-ன் இந்த சலுகை உடன் வேறு எந்த சலுகையையும் இணைக்கக் கூடாது, குழுவாக புக் செய்ய முடியாது, ஒரு வழிப் பயணத்துக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும் என ஸ்பைஸ் ஜெட் ஏகப்பட்ட செக் வைத்திருக்கிறார்கள். ஒருவேளை இந்த சலுகையின் கீழ் விமான பயணச் சீட்டை பதிவு செய்த பின் பயணத்தை ரத்து செய்ய வேண்டுமானால், வழக்கம் போல பயணச் சீட்டுக்கான ரத்துக் கட்டணத்தைச் செலுத்தி கேன்சல் செய்யலாம். பாக்கி தொகை நமக்கு ரீ ஃபண்டாக வந்து விடும் என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.