இந்தியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் பொருளாதார மந்த நிலை, தேவை சரிவு, நுகர்வுச் சரிவு, வியாபாரம் இல்லை போன்ற வார்த்தைகளைக் கேட்க முடிகிறது.
வியாபாரிகளுக்கு இப்படி ஒரு சிக்கல் என்றால், மாத சம்பளம் அல்லது கூலி வாங்கும் பெரும் பகுதியான மக்களுக்கு தங்கள் வேலை இந்த பொருளாதார பிரச்னையால் பறி போய் விடுமோ என அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியப் பொருளாதாரத்தையும், இந்திய மக்களையும் யாராவது எதையாவது செய்து காப்பாற்ற மாட்டார்களா..? என அனைத்து தரப்பு மக்களும் கதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
பதில்
இதற்கு விடை கொடுக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி ஒரு அதிரடி யோசனையை முன் மொழிந்து இருக்கிறார். ஓரளவுக்கு நல்ல சம்பளம் வாங்கும் சம்பளதாரர்கள் அனைவரின் வயிற்றிலும் பால் வார்க்கும் விதமாக ‘வருமான வரியை முற்றிலும் ஒழிக்க வேண்டும்' என ஒரு போடு போட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
டெபாசிட் வட்டி
அதோடு விட்டாரா...? என்றால் இல்லை. வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு நல்ல வட்டி கொடுக்க வேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9 சதவிகிதம் வட்டியாகக் கொடுக்க வேண்டும் எனச் சொல்லி வங்கிகளுக்கு பயத்தைக் காட்டி இருக்கிறார். இதற்குப் பிறகு சொன்னது தான் வங்கிகள் வாயைப் பிளந்து சுப்ரமணியன் சுவாமியை உற்றுப் பார்க்க வைத்து இருக்கிறது. அது தான் வங்கிகள் கொடுக்கும் கடன்கள்.
கடன் வட்டியைக் குறை
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி விகிதமாக 9 சதவிகிதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனச் சொல்லி அனைத்து வங்கிகளையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார். அதெப்படி வங்கியில் பணம் போடும் டெபாசிட்தாரர்களுக்கு 9 சதவிகிதம் வட்டி வருமானம் கொடுக்க வேண்டும், டெபாசிட் வழியாக வாங்கும் பணத்தை அதே 9 சதவிகித வட்டிக்கு கடன் கொடுத்தால் வங்கியை எப்படி நடத்துவது..? என யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.
வங்கியை எப்படி நடத்துவது
பொதுவாக வங்கிகள் எப்படி செயல்படும்..? ஒரு வங்கி இருக்கிறது. அந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். டெபாசிட் செய்த பணத்துக்கு 8% வட்டி கொடுக்கிறது வங்கி. பின் டெபாசிட்டாக வாங்கிய பணத்தை கடன் தேவை உள்ளவர்களுக்கு கடனாகக் கொடுத்து ஆண்டுக்கு 12 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் வட்டி வசூலிக்கிறது வங்கிகள். கொடுத்த கடன் பணத்துக்கு 12% வட்டி வரவு, டெபாசிட் பணத்துக்கு 8% வட்டி செலவு போக மீதமுள்ள 4% தான் வங்கியின் லாபம். இப்படித் தான் வங்கி இயங்குகிறது. இப்போது இந்த அடிப்படையே சிதையும் அளவுக்கு ஐடியா கொடுத்து இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
சாத்தியமா..?
சுப்ரமணியன் சுவாமி சொல்வது போல டெபாசிட்டுக்கு 9 சதவிகிதம் வட்டி, கடன்களுக்கும் 9 சதவிகிதம் வட்டி என்றால் ஊழியர்கள் சம்பளம் போன்ற வங்கிகளின் அன்றாட செலவுகல்ளை எல்லாம் எங்கிருந்து நிதி திரட்டிக் கொடுப்பது என்கிற கேள்வி எழுகிறது. சுப்ரமணியன் சுவாமி முன் மொழிந்திருக்கும் இந்த யோசனைக்கு, அவர் தெளிவான விளக்கம் கொடுத்தால் தான் இது முழுமையாக சாத்தியமா இல்லையா என்பதையே சொல்ல முடியும்.
புத்தகம் வரும்
இதை எல்லாம் சொல்லிவிட்டு, அடுத்த மாதம் பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஒரு புத்தகம் வெளியிடப் போகிறேன். என்ன மாதிரியான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அடுத்த மாதம் செப்டம்பர் 05, 2019 அன்று வெளியாக இருக்கும் எனது புத்தகத்தில் விரிவாக எழுதி இருக்கிறேன் எனச் சொல்லி இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
நிர்மலா சீதாராமன்
ஆனால் தற்போது நிர்மலா சீதாராமனோ, இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவசர அவசரமாக சந்தை முதலீட்டாளர்கள் மீது விதித்து இருந்த சர் சார்ஜ்களை நீக்கியது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்த ஏஞ்சல் டேக்ஸுக்கு ஒரு முடிவு கட்டியது, வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் கொடுத்தது என சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.