ஆகஸ்ட் 25 உடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு 9 சதவீத அளவை தாண்டி 9.07 சதவீதத்தை அடைந்துள்ளது. இது கடந்த 3 வருடத்தில் பதிவு செய்யப்பட்ட மிகவும் மோசமான அளவீடாகும், சரியாகச் சொல்லவேண்டும் என்பால் செப்டம்பர் 2016இன் முதல் வாரத்திலிருந்து கணக்கிட்டால் தற்போதைய 9.07 சதவீதம் தான் மிகவும் மோசமான அளவீடு.
கடந்த 4 வாரங்களாக இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு 7.9 முதல் 9.1 சதவீதம் வரையில் ஊசல் ஆடிக்கொண்டு இருந்த நிலையில் தற்போது 100 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 9.07 சதவீதத்தை அடைந்துள்ளது.
இந்தியாவில் வேலையில்லாத திண்டாட்டம் பிரச்சனை 2015ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்தே மோசமான நிலையை அடைந்து வந்தது. இதைச் சமாளிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு பல முயற்சிகள் செய்தும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை.
இப்படி வேலையில்லா திண்டாட்டம் மோசமான நிலையில் இருக்கும் போது அப்போதைய பிஜேபி கட்சி தலைவரும் இன்றைய உள்துறை அமைச்சரான அமித் ஷா, வேலையில்லை எனப் புலம்புவதை விடப் பக்கோடோ போட்டு வியாபாரம் செய்யலாம் எனக் கூறினார்.
அமித்ஷாவின் இந்தப் பேச்சு இளைஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாகப் படித்து முடிவு வேலைவாய்ப்புக்காகத் தேடி அலையும் கோடான கோடி இந்திய இளைஞர்கள் மனத்தில் காயமாகவே இருந்தது. ஆயினும் பல்வேறு நம்பிக்கை பேச்சுக்கள் மூலம் மோடி அரசு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
2019 பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்து பணிகளைத் துவங்கும் போதும் பட்ஜெட் வந்தது. இந்தப் பட்ஜெட்-இல் பல அதிரடியாகத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் இந்திய முதலீட்டு சந்தையும், தொழிற்துறையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதனால் பல துறைகள் தனது வர்த்தகத்தை இழந்து ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கி வருகிறது. இதில் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் மட்டும் கடந்த 3 மாதத்தில் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இது இந்தியாவில் வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது என்றால் மிகையில்லை.