இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி கடந்த 3 வருடமாகத் தொடர் சரிவில் இருப்பது நாம் எல்லோருக்கும் தெரியும் அதிலும் குறிப்பாக மோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டுக்குப் பின் இந்திய பொருளாதாரம், ரூபாய் மதிப்பு, வர்த்தகச் சந்தை என அனைத்தும் மோசமான நிலையில் உள்ளது.
இந்தப் பொருளாதாரச் சரிவு சாமானிய இந்திய மக்களை எப்படிப் பாதிக்கிறது..? வாங்கப் பார்ப்போம்.
நகரம் மற்றும் கிராமம்
இந்தியாவில் தற்போது நிலவி வரும் பொருளாதாரச் சரிவு, நகரப்புற மக்களைக் கார், வீடு, இரு சக்கர வாகனம், நகைகள் போன்றவற்றை வாங்குவதில் இருந்து தள்ளவைத்துள்ளது. இதுவே கிராமப்புற மக்கள் மத்தியில் பிஸ்கட், ஆடைகள், ஹேர் ஆயில் போன்றவற்றை வாங்குவதில் இருந்து தள்ளி வைத்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வியலுக்கும் நல்லது அல்ல.
ஆய்வறிக்கை
பொருளாதாரச் சரிவால் இந்திர கிராம மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய ஆய்வறிக்கையில், இந்தியக் கிராமங்களில் இருக்கும் 83.3 கோடி மக்கள் இந்தப் பொருளாதாரச் சரிவால் ஆடை வாங்குவதை முழுமையாக நிறுத்தியுள்ளனர். கடந்த ஒரு வருட வர்த்தக நிலையை ஒப்பிடுகையில் ஜூன் 2018இல் 0.39 சதவீதமாக இருந்த ஆடை வர்த்தகம், 2019 ஜூன், ஜூலை மாதத்தில் 0 சதவீதமாக உள்ளது.
இதைத் தான் பொருளாதார வீழ்ச்சி எனக் கருதப்படுகிறது.
ஹேர் ஆயில்
இதேபோல் வளர்ந்து வரும் இந்திய கிரமங்களில் ஹேர் ஆயில் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் மிகவும் குறைந்த வளர்ச்சி அளவான 4.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதுவும் நாட்டின் பொருளாதாரச் சரிவிற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு.
வருமானம்
இதேபோல் 2013-14ஆம் ஆண்டுக் காலத்தில் இந்திய கிராம மக்களின் வருவாய் வளர்ச்சி 14.6 சதவீதமாக இருந்தது. 2018-19ஆம் நிதியாண்டில் இதன் அளவு வெறும் 1.1 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் கிராம மக்கள் செலவு செய்வது மட்டும் குறையவில்லை, அவர்களது வருமானமும் அதிகளவில் குறைந்துள்ளதை இந்த வருமான வளர்ச்சி அளவுகள் மிகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
FMCG துறை
65000 இந்திய கிராமங்களில் சுமார் 83.3 கோடி மக்கள் இருக்கும் நிலையில் நுகர்வோர் நிறுவனங்களின் 50 சதவீத சந்தை இவர்கள் தான். இந்நிலையில் இவர்களின் வருமானம் பாதிப்பு அடையும் போது கிராமங்களில் வர்த்தகமும் அதிகளவில் குறையும். இது நுகர்வோர் துறைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் மூலம் ஆட்டோமொபைல், ஐடி, டெக்ஸ்டைல் துறை வரிசையில் தற்போது நுகர்வோர் நிறுவனங்களும் இணைந்துள்ளது.